சென்னை: ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு கண்ணபிரான் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிங்கா படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மலேசியாவில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி தொடங்குகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடங்களை இயக்குநர் ரஞ்சித் நேரில் பார்வையிட்டு முடிவு செய்துள்ளார்.
இந்தப் படத்துக்கு என்ன தலைப்பு என்று ரசிகர்களும் மீடியாவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். தினசரி இதுதான் ரஜினி படத் தலைப்பு என்று கூறி வந்தனர். இந்தப் படத்தில் ரஜினியின் வேடம் முள்ளும் மலரும் காளி போல இருக்கும் என்று ரஞ்சித் சொன்னதை வைத்து, படத்துக்குப் பெயர் காளி என்றே எழுதிவிட்டனர்.
இந்த நிலையில் இப்போது படத்தின் தலைப்பு 'கண்ணபிரான்' என்று சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணபிரான் என்பது ஏற்கெனவே இயக்குநர் அமீர் பதிவு செய்து வைத்திருக்கும் தலைப்பு. பருத்தி வீரனுக்குப் பிறகு அவர் இயக்கவிருந்த படத்துக்கு இந்தத் தலைப்பைப் பதிவு செய்து வைத்தார். ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. லிங்கா தலைப்பும் அமீர் பதிவு செய்து வைத்திருந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment