அரண்மனை 2: லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறும் 103 அடி உயர அம்மன் சிலை!

|

அரண்மனை படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2. இந்தப் படத்தில் சித்தார்த் , த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

103 ft high mega Amman statue for Aranmanai 2

அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக 103 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் முன் ஏராளமான நடன கலைஞர்கள் மற்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை கொண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்காக உருவாக்கப்பட்டுள்ள அம்மன் சிலையானது ஆசியாவிலேயே மிகப் பெரிய அம்மன் சிலை என்றும், இதைப் போன்ற 103 அடி உயர அம்மன் சிலை வேறு எங்கும் கிடையாது என்று படக்குழுவினர் கூறினார். இந்த அம்மன் சிலை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்னும் உலக சாதனை முயற்சிகளுக்கான புத்தகத்தில் இடம் பெறவுள்ளது குறிப்பிடதக்கது. இந்த பிரம்மாண்டமான அம்மன் சிலையை உருவாக்கியவர் கலை இயக்குநர் குருராஜ்.

இதுகுறித்து குருராஜ் கூறுகையில், "அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்கு பிரமாண்டமான அம்மன் சிலை ஒன்று தேவை. அதை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கலாம் என்றுதான் யோசித்தோம். ஆனால் பார்க்கும் போது உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் நிஜ அம்மன் சிலையை 103 அடி உயரத்தில் உருவாக்க முடிவு செய்து வேலையை ஆரம்பித்தோம். மிகப் பெரிய வேலைப்பாட்டுக்கு பின்பு நானும் என் குழுவும் இந்த சிலையை உருவாக்கி முடித்தோம். இந்த சிலை செய்து முடிக்க நாற்பது நாட்களுக்கு மேல் ஆனது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ், ஸ்கேலிடன் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு சிலை நாங்கள் உருவாக்கினோம்.

முறைப்படி அம்மன் சிலையை வடிவமைப்பவர்கள் அதை எப்படி உருவாக்குவார்களோ அதே போல் விரதம் இருந்து முறைப்படி இந்த 103 அடி அம்மன் சிலையை நானும் என் குழுவினரும் உருவாக்கினோம். இதைப்
போன்ற அம்மன் சிலை எங்கும் பார்க்க முடியாது," என்றார்.

பாடல் காட்சியை இயக்கிய ஷோபி மாஸ்டர் கூறுகையில், "அரண்மனை 2 படத்துக்காக இந்த பிரமாண்ட 103 அடி உயர அம்மன் சிலை முன்பு அம்மன் பாடலை இயக்குவது எனக்கு மிகவும் வியப்பாகவும் புதுமையாகவும் உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் சுந்தர் சி அவர்களுக்கு நன்றி. நான் இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளேன். அவற்றில் கோவில் முன்பு, கோவில் திருவிழா போன்ற பாடல்களும் அடங்கும். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக முழுமையான ஒரு அம்மன் பாடலை இயக்கியுள்ளேன். இயக்குநர் சுந்தர் சி என்னிடம் அம்மன் பாடலுக்கு நடனம் அமைக்க வேண்டும் அதுவும் 103 அடி உயர மிக பிரம்மாண்டமான அம்மன் சிலைக்கு முன்பு பாடலை மிக பெரிய அளவில் படமாக்க வேண்டும் என்றதும் என்னுள் ஆர்வம் தொற்றிகொண்டது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகி இருக்கும் முதல் அம்மன் பாடலை கேட்க நானும் ஆர்வமாக இருந்தேன். பாடலைக் கேட்டவுடன் நான் நிஜமாகவே அசந்துவிட்டேன். சிறப்பாக வந்துள்ளது. இசையில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் ர் ஹிப்ஹாப் தமிழா ஆதி," என்றார்.

ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார் பேசுகையில், "ஆரண்மனை 2 படத்துக்காக பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 103 அடி உயர அம்மன் சிலையின் முன்பு படப்பிடிப்பு நடத்துவது எனக்கு புதுமையாக உள்ளது," என்றார்.

 

Post a Comment