பிலிமில் படமாக்கப்பட்ட கடைசி தமிழ்ப் படம் தனி ஒருவன்!- ஒளிப்பதிவாளர் ராம்ஜி தகவல்

|

டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய சினிமாவில், பிலிம் ரோலில் படமாக்கப்பட்ட கடைசி படம் என்ற பெருமை தனி ஒருவனுக்குக் கிடைத்துள்ளது.

இதனை படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ராம்ஜி. ‘பருத்தி வீரன்', ‘ராம்', ‘ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', ‘இரண்டாம் உலகம்' என பல வெற்றிப் படங்களுக்கு வித்தியாசமான ஒளியையும் கோணங்களையும் தந்தவர்.

Cinematographer Ramji shares his Thani Oruvan Experience

மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள ‘தனி ஒருவன்' படத்திற்கும் ராம்ஜிதான் ஒளிப்பதிவு.

பொதுவாக ராம்ஜி வரும் வாய்ப்புகளையெல்லாம் ஏற்பவர் அல்ல. தனது ஒளிப்பதிவுத் திறமைக்கான வாய்ப்பிருக்கும் படங்களை ஒப்புக் கொள்வார். அந்தப் படம் முடியும் வரையில் வேறு வாய்ப்புகளை ஏற்கவும் மாட்டார்.

தனி ஒருவன் படத்துக்காக நான்கு ஆண்டுகள் வேறு வாய்ப்புகளை ஏற்காமல், மோகன் ராஜாவுடன் பயணித்த ராம்ஜி, அந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இனி ராம்ஜி...

தனி ஒருவன் படம் வெற்றி எனக்கு மிகுந்த நிறைவையும் சந்தோஷத்தையும் தருகிறது. காரணம் அதற்கான உழைப்பு அப்படி. நான்கு ஆண்டுகள். மோகன் ராஜா சிறந்த இயக்குனர். ஒளியமைப்பு, கோணங்கள் அனைத்தையும் என் முடிவுக்கே விட்டுவிட்டார். என்னிடமிருந்து என்ன சிறந்த பணியைப் பெற முடியுமோ அதை என்னை சுதந்திரமாக இயங்க விட்டுப் பெற்றார்.

என்னுடைய முதல் படம் முதல் ‘தனி ஒருவன்' படம் வரை பிலிமில்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். ‘தனி ஒருவன்' படம்தான் பிலிமில் செய்த கடைசி படமாக இருக்கும் என நினைக்கிறேன். இனி பிலிம் வருமா, வராதா என்று தெரிய வில்லை. ஹாலிவுட்டில் இன்றும் பிலிம்தான். பிலிமில் ஒளிப்பதிவு செய்யும்போது கிடைக்கும் அழுத்தம், டிஜிட்டலில் வருவது கஷ்டம்தான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிலிம் வரும் என்கிறார்கள். பார்க்கலாம்!

தனி ஒருவனில் அனைவரும் பாராட்டும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கும்போது, அதற்கு மட்டும் தனி வண்ணத்தை நிர்ணயித்தேன். குறிப்பாக அந்த பேக்டரி சண்டை. அந்த வண்ணத்தை மாற்றலாம் என இயக்குநர் முதலில் கூறினார். பின்னர் நான் நிர்ணயித்ததை ஏற்றுக் கொண்டார்.

Cinematographer Ramji shares his Thani Oruvan Experience

அதே போல, இந்தப் படத்தில் வில்லனைத்தான் அழகாகக் காட்ட வேண்டும் என தீர்மானித்தேன். ஹீரோ, ஹீரோயினை விட வில்லனுக்கு தனி வண்ணம் கிடைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதுதான்.

அதே போல, மசூரியில் பனியாற்றில் படகு சவாரி செய்யும் காட்சிகளை மிகுந்து சவாலான சூழலில் படமாக்கினோம்.

படத்தின் வெற்றி, தோல்விகள் என்னைப் பாதிப்பதில்லை. ஆனால், ‘ஆயிரத்தில் ஒருவன்,' இரண்டாம் உலகம் படங்களை ரொம்ப கஷ்டப்பட்டு படமாக்கினோம். ஆனால், படம் வெளிவந்த பிறகு ஒளிப்பதிவு நன்றாக இல்லை என்று சொல்லியிருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், அந்தப் படங்களைப் பற்றி யாரும் ஒரு கருத்தும் கூறவில்லை. அப்படியே அனாதையாக விட்டுவிட்டார்கள். மிகக் கடுமையான உழைப்பை யாரும் பாராட்டக்கூட இல்லை. அப்போதுதான் எனக்கு மிகவும் வலித்தது.

எனக்கு அமைந்த கதைகள் எல்லாம் நீண்ட நாட்களை எடுத்துக்கொள்ளும் படங்களாகவே அமைந்துவிட்டன. இனி வருடத்துக்கு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய முடிவெடுத்திருக்கிறேன்," என்றார்.

 

Post a Comment