சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற 7-ந்தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரபல பாடகர் ஹரிஹரனுக்கு மே 17 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை இனவெறி அரசு 2009-ல் கொத்துக் குண்டுகளையும், வேதி குண்டுகளையும் போட்டு ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைக் கொன்றது. இதை மறைக்க இலங்கை அரசு இசை மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இந்திய கலைஞர்களை அழைத்து நடத்த எண்ணுகிறது.
அதன் சதியை புரிந்துகொண்டு திரையுலகினரும், இசையுலகினரும் விழாவை புறக்கணித்து வருகின்றனர். 2010-ல் கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்றோர் புறக்கணித்தனர்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாடகர் மனோ உள்ளிட்டோர், எதிர்ப்பினால் கலந்து கொள்ளாமல் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் சென்றனர். தமிழ் நெஞ்சங்களுக்கு சிறு கஷ்டம் வந்தாலும், அத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மனோ அப்போது பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த 'பிக்மவுண்டெய்ன்' இசைக்குழுவும் தனது நிகழ்ச்சியை ரத்து செய்தது. தமிழா தமிழா நாளை நம்நாளே என்று நம்பிக்கையூட்டும் ஹரிஹரன் குரலையே உலகம் கேட்க விரும்புகிறது. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் ரத்து செய்யவேண்டும்."
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.