சிவாஜியை விட 100 மடங்கு பிரமாண்டத்துடன் சிவாஜி 3 டி தயாராகியுள்ளது. இந்தப் படம், ரசிகர்களுக்கு என் பிறந்தநாள் பரிசாக வருகிற 12-ந் தேதி வெளிவருகிறது, என்று சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து ஏவி.எம். நிறுவனம் தயாரித்து வெளிவந்த மிகப் பெரிய வெற்றிப் படம், ‘சிவாஜி.'
5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படம் வெளியானது. இப்போது இந்த படத்தை ஏவி.எம். நிறுவனமும், பிரசாத் லேப்பும் சேர்ந்து, பல கோடி ரூபாய் செலவில், ‘3டி டால்பி அட்மாஸ்' என்ற புதிய தொழில்நுட்பத்துடன் பிரமாண்ட படமாக உருவாக்கி இருக்கிறார்கள். டால்பி அட்மோஸ் ஒலியுடன் வெளியாகும் இந்தியாவின் முதல் படம் இது. ரஜினிகாந்தின் பிறந்தநாளான 12-12-2012 அன்று படம் வெளிவர இருக்கிறது.
வீடியோவில் தோன்றிய சூப்பர் ஸ்டார்
‘சிவாஜி 3டி' படத்தின் 2 பாடல்கள் மற்றும் ஒரு சண்டை காட்சியை சென்னை சத்யம் தியேட்டரில், செய்தியாளர்களுக்காக நேற்று இரவு திரையிட்டு காண்பித்தார்கள்.
முன்னதாக, வீடியோவில் ரஜினிகாந்த் தோன்றிப் பேசினார்.
அதில், ‘‘நான் இப்போது ஊரில் இல்லை. வெளியூரில் இருக்கிறேன். ‘சிவாஜி' படத்தை ஷங்கர் இயக்கத்தில் ஏவி.எம். நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டது.
இப்போது அந்த படத்தை ஏவி.எம். நிறுவனமும், பிரசாத் லேப்பும் இணைந்து பிரமாண்டமாக செலவு செய்து 3டி படமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த செலவில், 3 புதிய படங்களே எடுத்து விடலாம். ‘சிவாஜி 3டி' படத்தை நான் பார்த்தேன். பிரமாதமாக இருக்கிறது. சிவாஜியை விட 100 மடங்கு பிரமாண்டம் இதில் தெரிகிறது. இதை என் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு ஏவி.எம். நிறுவனம் அளிக்கிறது. அதற்காக, ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.
Post a Comment