சென்னை: விஸ்வரூபம் பிரச்சினையில் நடிகர் கமல்ஹாஸனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான ஆர் பார்த்திபன்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை
-சுதந்திரம்!
அரூபமாகவே இருந்தால்
விஸ்வரூபம் எடுப்பது எப்போது?
படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும் இடையே சென்சார் பொது/போதுமானது.
சென்-சார்பாக ஆறு பேர் எப்படி முடிவெடுப்பது என மடக்கு வாதம் செய்வதானால்,100 கோடி மக்கள் சார்பாக 100 பேர் முடக்கு'வாதம் செய்வதும் தீவிரவாதமே!
பத்திரிக்கைகளில் வரும் உண்மை செய்திகளை பற்றி (இப்போது)பார்பர் கடைகளில் கூட விவாதிப்பதில்லை ஆனால் படத்தில் வரும்'முன் காக்க படை திரண்டு வருகிறோம். நீதிமன்றத்தில் நாளை தடையை நீக்கிவிட்டால் அது யார் குற்றம்? நீதியின் குற்றமோ?
மக்கள் சக்தி மாபெரும் சக்தி. குற்றம் என தெரிந்தால் கொந்தளித்து விடுவார்கள். எனவே எதையுமே அவர்கள் பார்வைக்கு ரிலீஸ் செய்வோம், அவர்கள் சிறந்த தீர்ப்பளிப்பார்கள். சினிமாவை பொருத்தவரை கண்டு'காமல் விட்டாலே தண்டனைதான்.
கமல் சாருக்கு ஏற்படும் நஷ்டம் மறைமுகமாக சினிமாவுக்கே. ஒரு தனி மனிதனுக்காக ஒரு இனத்தின் சினத்தை பயன் படுத்த வேண்டாமென்பதே என் மென் கோரிக்கை.
'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்... '- பாரதி.
'ஒவ்வொரு கோதுமையிலும் உரியவன் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது'-நபிகள்.
யாருடைய வயிரையோ/மனதையோ நாம் புண் படுத்த வேண்டாமே!
சுதந்திரம் இல்லா வர்க்கத்தின் குடியரசு தின வாழ்த்துக்கள், ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து நண்பர்களுக்கும்...
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment