கேரளாவில் கத்தி படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதால், அவர் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
கத்தி படம் உலகம் முழுவதும் 1400 அரங்குகளில் வெளியானது. பக்கத்து மாநிலமான கேரளாவில் 100 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. படத்துக்காக பெரும் விளம்பரம் செய்தனர். ரயில், பஸ்களிலெல்லாம் கத்தி விளம்பரம் செய்தார்கள்.
இந்தப் படத்தின் கேரள உரிமை 4.5 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது. கேரளத்தைப் பொறுத்தவரை இது பெரிய தொகை.
படம் வெளியான முதல் நாள் நல்ல வசூல் கிடைத்ததாம். கிட்டத்தட்ட ரூ 1 கோடி வரை வசூல் கிடைத்ததாகவும், அடுத்த நாளிலிருந்து வசூல் 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரத்துக்குள் பெரும்பாலான அரங்குகளில் படத்தை எடுக்கும் நிலை வந்துள்ளதால், படத்துக்கு முதலீடு செய்த தொகையில் ரூ 2 கோடி வரை நஷ்டப்படும் சூழல் எழுந்துள்ளதாக கேரள திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
கத்தி படம் முதல் நாளே ரூ 23.85 கோடியை வசூலித்துள்ளதாக அதன் இயக்குநரே கூறியுள்ள நிலையில், இப்போது கேரள விநியோகஸ்தர் நஷ்டம் என புலம்ப ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக தமிழ்ப் படங்களை 2 கோடிக்குள்தான் விலைக்கு வாங்குவார்கள் கேரளாவில். ஆனால் ரூ 4.5 கோடிக்கு கத்தியை படத்தை வாங்கிய இந்த விநியோகஸ்தர், மேலும் ஒரு கோடியை விளம்பரத்துக்காக செலவு செய்திருந்தாராம்.
இதையெல்லாம் எப்படி எடுக்கப் போகிறேனோ என்று விநியோகஸ்தர் சங்கத்தில் முறையிட்டுள்ளாராம்.
Post a Comment