சென்னை: சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மகனைவைத்து ‘நானே என்னுள் இல்லை'என்ற திரைப்படத்தை இயக்கினார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ரெங்கவிலாஸ் என்ற நெடுந்தொடரிலும் நடித்தார் ஜெயசித்ரா.
நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார் ஜெயசித்ரா. அவரது வீட்டு வளாகத்தில் சிறிய அளவில் விநாயகர் கோவில் கட்டி அவர் வழிபட்டு வந்தார். கோவிலில் மூன்றரை அடி உயர விநாயகர் சிலை உள்ளது. இதற்கு 25 கிலோ எடையில் வெள்ளிக் கவசம் செய்து வைத்து இருந்தார்.
முக்கிய நாட்களின் போது விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. மற்ற நாட்களில் மரப்பெட்டியில் பூட்டி வீட்டில் பாதுகாக்கப்பட்டு வந்தது. நித்ய பூஜை செய்வதற்காக தனியாக அர்ச்சகர் ஒருவரை நியமித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வெள்ளிக் கவசம் கடந்த 24ஆம்தேதி மாயமானது. அர்ச்சகர் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜெயசித்ரா மானேஜர் கணேசன் நுங்கம்பாக்கம் போலீசில் இன்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை போன வெள்ளிக் கவசம் மதிப்பு ரூ.9 லட்சம் எனக் கூறப்படுகிறது.
Post a Comment