தேனி: ரஜினிகாந்தின் பேரனும், தனுஷின் இளைய மகனுமான லிங்காவுக்கு குலதெய்வ கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா(6), லிங்கா(2 1/2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அதில் லிங்காவுக்கு, தனுஷின் அண்ணன் செல்வராகவனின் 1 வயது மகள் மற்றும் அக்கா டாக்டர் விமலகீதாவின் மகளுக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தரெங்கபுரத்தில் உள்ள தங்கள் குல தெய்வ கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்த முடிவு செய்தனர்.
அதன்படி கஸ்தூரி ராஜா, தனது மகன்கள் தனுஷ், செல்வராகவன், மகள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் நேற்று முத்துரெங்காபுரம் கோவிலுக்கு காரில் வந்தார். அங்கு லிங்கா, செல்வராகவன் மகள், விமலகீதாவின் மகளுக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. அதன் பிறகு கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அருகில் உள்ள தோட்டத்தில் கிடா வெட்டி விருந்து தயாரித்து சாமிக்கு படைத்துவிட்டு அனைவரும் சாப்பிட்டனர்.
தனுஷ் குடும்பம் வந்திருக்கும் செய்தி அறிந்த ஊர் மக்கள் அங்கு கூடிவிட்டனர். நேற்று மாலை 4 மணி அளவில் தனுஷ் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டு தேனிக்கு சென்றனர். தனுஷின் அம்மா விஜயலட்சுமியின் சொந்த ஊரான சங்கராபுரத்தில் இருக்கும் கருப்பசாமி கோவிலில் இன்று அவர்கள் பொங்கல் வைப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
Post a Comment