நடிகர் விஜய்யின் தாய் மாமாவும் பின்னணி பாடகருமான எஸ் என் சுரேந்தர் தன் மகன் விராஜை ஹீரோவாகக் களமிறக்குகிறார்.
யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர். மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘மொழிவது யாதெனில்' என்று தலைப்பிட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க நட்பை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன். இதில் கதாநாயகனாக பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ் நடிக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக அந்நியன் படத்தில் சிறு வயது ‘அம்பி' விக்ரம் வேடத்தில் நடித்தவர். மேலும் சில படங்களில் சிறுவனாக நடித்து பாராட்டு பெற்றவர், முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இவருடன் ராஜன், ரியாஸ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கவுரவ வேடத்தில் எஸ்.என்.சுரேந்தர் நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை பாடி நடிக்கிறார்.
நித்யன் கார்த்திக் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘தம்பி' சிவா நடனம் அமைக்க, ‘மிரட்டல்' செல்வா சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார். திரைக்கதை, வசனத்தை இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக், இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர். படத்தொகுப்பு வில்சி.
படம் பற்றி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "உயிரை காப்பாற்றிய நண்பனின் கடனுக்காக, தங்களது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இரண்டு நண்பர்களின் கதை. அதை நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறேன். ஈரோடு, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியிருக்கிறேன்," என்றார்.
Post a Comment