ஜெய்ப்பூர்: அரசு அனுமதியின்றி மாநில சட்டசபையை படம் பிடித்ததாக டர்ட்டி பாலிடிக்ஸ் பட இயக்குநர் மீது ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிறை செல்ல காரணமாக இருந்த பன்வாரி தேவி வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்'.
மல்லிகா ஷெராவத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ராஜஸ்தானில் உரிய அனுமதியின்றி படமாக்கப்பட்டதால், படத்தின் இயக்குனர் கே.சி. பொகாடியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் ரத்தோர், ராஜஸ்தான் திரைப்பட படப்பிடிப்பு சட்டம், தேசிய சின்ன சட்டம் மற்றும் பெயர் சட்டம் என்று எந்த சட்டத்தையும் இயக்குனர் பின்பற்றவில்லையென்றும், அவரது இந்த செய்கை, விதான் பவனின் கவுரவத்தை காயப்படுத்திவிட்டதாகவும், அதன் கண்ணியத்தை குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த படம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமோ, போலீஸ் கமிஷனரிடமோ முன் அனுமதி வாங்காமல் விதான் சபா கட்டிடத்தை வெளியிலிருந்து படம் பிடித்த குற்றத்திற்காக திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'டர்ட்டி பாலிடிக்ஸ்' படத்தில் அரசியல்வாதிகளின் கறுப்பு பக்கங்களை வெளிப்படுத்தியுள்ளதால் தன்மீது அரசியல்வாதிகளின் கோபம் திரும்பியுள்ளது என்கிறார் படத்தின் இயக்குநர்.
Post a Comment