சென்னை: சினிமாவில் அவனவன் வேலையை அவனவன் பார்த்தா எந்த பிரச்சினையும் வராது என்றார் நடிகர் ராதாரவி.
மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின் 'என்வழி தனி வழி' படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது, "ஆர்கேவை நான் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். அவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இவர் ஒரு நல்ல தொழிலாளி, நல்ல நிர்வாகியும் கூட.
இந்த விழாவில் ஒரு இயக்குநர் உங்களது இந்த தலைமுடி கெட்அப்-ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு. என் அடுத்த படத்தில் பயன்படுத்திக்கிறேன் என்றார். மயிருக்கு உள்ள மரியாதை மனுஷனுக்கு இல்லை.
நான் சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாதவன். எனக்கு நடிப்பது தவிர தெரியாது. கேமரா முன்னால் மட்டும்தான் நடிக்கத் தெரிந்தவன். ஆர்கே தேர்ந்தெடுக்கிற கதைகளைப் பார்த்து எங்கே இப்படிப்பட்ட கதையைப் பிடிக்கிறார் என்று ஆச்சரியப்படுவேன்.
‘என் வழி தனி வழி' படத்தில் அவர் முதல் போட்ட தயாரிப்பாளராக இருந்தாலும் டைரக்டர் சொன்னபடிதான் கேட்டார். அவரிடம் ஆர்கே எவ்வளவு திட்டு வாங்கினார் தெரியுமா? ஒரு உதவியாளர்போல வேலை பார்த்தார்.
சினிமாவில் அவனவன் வேலையை அவனவன் செய்யவேண்டும். அடுத்தவன் வேலையைச் செய்யக் கூடாது. அதுபோல டைரக்டர் வேலையை அவர் செய்கிறார் என்று பொறுமையாக இருந்தார் ஆர்கே. அவரிடம் தான் முதலாளி என்கிற திமிர் இல்லை. எதிலும் தலையிடவில்லை. சினிமாமீது அவருக்கு அவ்வளவு காதல். அது அவரை இன்னும் உயர்த்தும்," என்றார்.
Post a Comment