சென்னை: தி.மு.க.வின் அடுத்தத் தலைவர் யார் என்பது தொடர்பாக குஷ்பு தெரிவித்த கருத்து, அவரது சொந்தக் கட்சிக்குள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சையினால் குஷ்பு வீடு மீது கல்வீச்சும், திருச்சியில் அவர்மீது செருப்பு வீச்சும் நடந்தது. இது குறித்து குஷ்புவின் கருத்து என்ன என்பதும், அவர் எடுக்கப் போகும் அடுத்தக் கட்ட முடிவு என்ன என்பதும் இப்போது பரபரப்பான கேள்வியாக மாறியிருக்கிறது.
இது உள்கட்சி விவகாரம் ஆகையால் சினிமா பிரபலங்கள், பெரிதாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
பிரபலங்கள் ஆறுதல்
இது தொடர்பாக டுவிட்டரில் குஷ்புக்கு ஆறுதல் சொல்லியுள்ள எஸ்.வி.சேகர், ‘‘வெற்றியை நோக்கிச் செல்லும்போது திரும்பிப் பார்க்கக்கூடாது'' என்று குஷ்புவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
சின்மயி ஆதரவு
குஷ்புவுக்கு பாடகி சின்மயி, குஷ்புவுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறியுள்ளார். ஜாக்கிரதை குஷ்பு, என்று பாடகி சின்மயி, ஆலோசனை வழங்கியுள்ளார்.
சின்மயிக்கு ஆதரவான குஷ்பு
சமீபத்தில், பாடகி சின்மயி சமூக வலைத்தள சர்ச்சையில் சிக்கியபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் குஷ்புவும் ஒருவர். அப்போது குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் "சில ஆண்கள் பெண்களை மட்டமாக நடத்தலாம் என கருதுகிறார்கள். அவர்களுக்கு சின்மயி கொடுத்த தண்டனைதான் சரியானது" என அதிரடியாக கூறியுள்ளார். அதற்கு பதிலாகவே சின்மயி இப்போது குஷ்புவுக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.
நலமாக இருக்கிறேன்
குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு ஆறுதல் சொன்ன ரசிகர்களுக்கு, ‘‘நண்பர்களே... நான் நலமாக இருக்கிறேன். ஒரு துரதிர்ஷ்டம் நடந்துவிட்டது. விசாரணை முடியும் வரை அதுபற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது. நன்றி'' என்று கூறியுள்ளார்.
Post a Comment