சம்பள விவகாரம்.. மன்னிப்புக் கேட்டேனா? - பத்மப்ரியா விளக்கம்

|

I Never Apologised With Anyone Says Padmapriya   

சென்னை: சம்பள கமிஷன் விவகாரத்தில் மலையாள தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டதாக வந்த செய்தி தவறானது என்று பத்மப்ரியா கூறியுள்ளார்.

பிரபல தமிழ், மலையாள நடிகை பத்மப்ரியா 'நம்பர் 66 மதுர பஸ்' என்ற மலையாள படத்தில் நடித்தபோது தனது மானேஜருக்கு ரூ.2 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் நிஷாத் மற்றும் தயாரிப்பாளரிடம் வற்புறுத்தினார்.

ஆனால் மலையாள பட உலகில் இதுபோன்று கமிஷன் தர தடை உள்ளது. எனவே பத்மபிரியா மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் நிஷாத் புகார் செய்தார்.

இதையடுத்து படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்தது. உடனே பதறிப் போன பத்மபிரியா தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், இதனால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

இதுகுறித்து பத்மபிரியாவிடம் கேட்டபோது, "நாங்க சுமூகமாக பேசித் தீர்த்துக்கிட்டோம். இப்போ எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை. இது ஒரு கம்யூனிகேஷன் கேப் அவ்ளோதான். அதைப் போய் பெரிசுபடுத்திட்டாங்க," என்றார்.

இந்த விவகாரத்தை பெரிதாக மீடியை முன் கொண்டு வந்து முறையிட்டவரே பத்மப்ரியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment