துப்பாக்கி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முடிவு செய்ய வசதியாக நீதிபதிகளுக்கு படத்தை திரையிட்டு காட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.அப்துல்ரகீம் தாக்கல் செய்த வழக்கில், "துப்பாக்கி படத்தில் முஸ்லிம் மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகளால் சமுதாய ஒழுங்கு கெடும். இந்தப்படத்துக்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்தின்படி தவறானதாகும்," என்று கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசீதரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் வக்கீல் விஜயராகவன், தமிழக அரசுத் தரப்பில் சிறப்பு அரசுப் பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, கலைப்புலி தாணு தரப்பில் வக்கீல் மகேஸ்வரி, மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் சங்கரசுப்பு, ஏ.ரமேஷ் ஆஜரானார்கள்.
அப்போது நடந்த விவாதம்:
சங்கரசுப்பு: துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் நிலையில் அதற்கு வழங்கப்பட்டுள்ள யூ சான்றிதழை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். அப்படிப்பட்ட காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
நீதிபதி பானுமதி: நீங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டீர்களா?
சங்கரசுப்பு: இல்லை.
விஜயராகவன்: தணிக்கைத்துறை சான்றிதழ் கொடுத்த பிறகு அதில் தலையிடக்கூடாது.
நீதிபதி சசீதரன்: அப்படியானால் ஏற்கனவே சில காட்சிகளை நீக்கப்பட்டு இருக்கிறதே. அதில் எப்படி தலையிட முடிந்தது?
இன்பதுரை: அதில் தமிழக அரசு தலையிட்டதால் ஆட்சேபனைக்கு உரிய காட்சிகளை நீக்க முடிந்தது. அந்த படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாக முஸ்லீம் தலைவர்கள் முறையிட்டதும், முதல்வரின் உத்தரவின்பேரில், கடந்த நவம்பர் 15-ந் தேதியன்று பேச்சுவார்த்தை நடந்தது.
உள்துறை செயலாளர் முன்னிலையில் நடந்த அந்தக் கூட்டத்தில் முஸ்லீம் தலைவர்கள், தயாரிப்பாளர் கலந்துகொண்டனர். அந்த பேச்சுவார்த்தையில், சர்ச்சைக்குரிய 5 காட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உட்பட முஸ்லிம் தலைவர்கள் வந்து முதல்வரைச் சந்தித்து நன்றி கூறினர்.
சங்கரசுப்பு: அவர்கள் ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ளவர்கள்.
இன்பதுரை: அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
நீதிபதி பானுமதி: இந்த படத்தை பாடல் காட்சிகள் நீங்கலாக நீதிபதிகளுக்கு 10-ந்தேதி திரையிட்டு காட்டவேண்டும். ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளை தனியாகக் காட்டவேண்டும். பிறகுதான் முடிவு செய்ய முடியும்.
+ comments + 1 comments
Post a Comment