விதவிதமான மனநிலை கொண்ட நான்கு பேரிடம் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணின் நிலைமையை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படம் ‘குரங்கு கையில பூ மாலை'.
இப்படத்தில் நாயகர்களாக ஜெகதீஷ், கௌதம் கிருஷ்ணா இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் சிக்கித் தவிக்கும் பெண்ணாக ‘கோலிசோடா' படத்தின் நாயகி சாந்தினி நடித்துள்ளார்.
மேலும், பல்வேறு படங்களில் குத்துப்பாடலுக்கு நடனமாடிய நிஷா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ணன். இவர் ஏற்கெனவே ‘விகடகவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 7-ந் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் கூறுகையில், "இப்படத்தில் நான்கு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் படத்தில் தனியாக எந்தவொரு டூயட் பாடலும், குத்து பாடலும் கிடையாது. கதையோடு பயணித்தபடியே பாடல்களும் இடம்பெற்றுள்ளது.
படத்தில் கவர்ச்சி இல்லை. கவர்ச்சி நடிகையான நிஷாவைக் கூட போர்த்திக் கொண்டு நடிக்கும் அளவுக்கு குடும்பப் பாங்கான கதை. இன்னும் சொல்லப் போனால், நிஷாவின் நடிப்பு இந்தப் படத்தில் பிரமாதமாக அமைந்துள்ளது," என்றார்.
சாய் அமீர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Post a Comment