மருத்துவமனை ஊழியர்கள் 24 பேருக்கு சம்பளம் பாக்கி: பவர்ஸ்டார் மற்றும் மனைவி மீது போலீசில் புகார்!!

|

Power Star Srinivasan Big Trouble

சென்னை: காமெடி நடிகரும் பப்ளிசிட்டி பிரியருமான பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி துருவியாவிற்கு சொந்தமான 2 மருத்துவனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி வைத்திருப்பதால், இருவர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் மற்றும் அவர் மனைவிக்கு சொந்தமான மருத்துவமனைகள் திருமங்கலத்தில் உள்ளன. இதில் டாக்டர்கள் உள்பட மொத்தம் 24 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லையாம்.

இதுபற்றி நிர்வாகத்திடம் கேட்டும் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

இன்று காலை 24 பேரும் திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தனிடம் புகார் மனு அளித்தனர். அதில், "எங்களுக்கு 3 மாதமாக மருத்துவமனை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் கஷ்டத்தில் உள்ளோம். சம்பளம் பற்றி கேட்டும், உரிமையாளர்கள் "பவர்ஸ்டார்" சீனிவாசன், அவரது மனைவி துருவியா ஆகியோர் அலட்சியம் காட்டுகின்றனர்.

எனவே எங்களது சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறி உள்ளனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, "புகாரின் அடிப்படையில் 'பவர் ஸ்டார்' சீனிவாசன், அவரது மனைவி துருவியாவிடம் விசாரிப்பதற்காக செல் போனில் தொடர்பு கொண்டோம். அவர்களிடம் பேச முடியவில்லை. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றனர்.

கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்து வருகிறார் இந்த சீனிவாசன். காமெடியன், ஒரு பாட்டுக்கு குத்தாட்டம், ஹீரோ என வெரைட்டியான ரோல்கள். ஒரு படத்துக்கு ரூ 1 கோடி சம்பளம் வாங்குவதாக அவரே ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்து வருகிறார்.

ஆனால் தொடர்ந்து 2 லட்சம், 9 லட்சம் என அற்ப தொகை பாக்கிக்காக செக் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளார். இப்போது தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கே சம்பள பாக்கி வைத்த புகாரில் சிக்கியுள்ளார்.

ஏற்கெனவே பல கோடி நிதி மோசடி குற்றாச்சாட்டில் கைதாகி ஜாமீனில்தான் வெளியில் நடமாடி வருகிறார் இந்த 'புவர் ஸ்டார்'!

 

Post a Comment