கொச்சி: கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகியான ராதிகா திலக் புற்றுநோயால் கேரள மருத்துவமனை ஒன்றில் காலமானர்.
கேரள மாநிலம் கொச்சி பிள்ளையா விளையை சேர்ந்தவர் ராதிகா திலக். 45 வயதான இவர் பிரபல மலையாள சினிமா பின்னணி பாடகி. 1991 ஆம் ஆண்டு "ஒற்றையால் பட்டாளம்" என்ற மலையாள சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ராதிகா திலக் 70 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் பாடியுள்ளார்.
இந்த நிலையில் ராதிகா திலக் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராதிகா திலக் மரணமடைந்தார். இதைதொடர்ந்து அவரது உடல் கொச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
ராதிகா திலக் மரணமடைந்த தகவல் கிடைத்ததும் மலையாள திரையுலகினர் அங்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பிரபல மலையாள பாடகர்கள் எம்.ஜி.ஸ்ரீகுமார், வேணுகோபால் உள்பட பாடகர்களும் ராதிகா திலக் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை பாடகி ராதிகா திலக் உடல் அடக்கம் கொச்சியில் நடைபெறுகிறது. ராதிகா திலக்கின் கணவர் சுரேஷ். இவர் தொழில் அதிபராக உள்ளார். இந்த தம்பதிக்கு தேவிகா என்கின்ற ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment