சென்னை: விஜயின் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த புலி படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், படம் நண்பகல் 12 மணிக்கு மேல் வெளியாகும் என்று திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் இவர்களுடன் இணைந்து 25 வருடங்களுக்குப் பின்பு ஸ்ரீதேவி நடித்திருக்கும் படம் புலி. ஆக்க்ஷன் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக புலியை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று அக்டோபர் 1-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இதையொட்டி, திரையரங்கு உரிமையாளர்களும் ‘புலி' படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். இன்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டன.
ஆனால், நேற்று இரவே ஒரு சில காரணங்களால் நிறைய திரையரங்குகளில் ‘புலி' படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, ரசிகர்களுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுத்துள்ளாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில திரையரங்குகள் 5 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்யவில்லை.
ஆனால் எந்தத் திரையரங்கிலும் புலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படவில்லை.5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காலை 8 மணி சிறப்பு காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதனால் படம் வெளிவருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பகல் 12 மணிக்கு மேல் ‘புலி' படம் வெளியாகும் எனக் கூறுகின்றனர்.
புலியின் தாமதத்தால் விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Post a Comment