டிவி வந்தபோது சினிமா அழிந்துவிடும் என்றார்கள்... ஆனால் வளர்ந்தது. விஞ்ஞானம் சினிமாவை வளர்க்கவே செய்கிறது, என்றார் கமல்ஹாஸன்.
வடசென்னையில் பெரம்பூரில் எஸ் 2 எனும் புதிய திரையரங்க வளாகத்தைத் திறந்துவைத்த கமல் பேசுகையில், "பெரம்பூருக்கு பல வருடங்களுக்கு முன் ஒரு நண்பரை பார்க்க நான் அடிக்கடி வருவது உண்டு. இன்று பெரம்பூர் முன்புபோல் இல்லாமல் நிறைய மாறி இருக்கிறது. நண்பரின் வீடு கூட அடையாளம் தெரியவில்லை.
1959-க்கு முன் இந்த இடம் நாடக கொட்டகையாக இருந்தது. அதன்பிறகு வீனஸ் தியேட்டராக மாறியது. தற்போது ‘மால்' ஆகி நவீன தியேட்டர்கள் வந்துள்ளது. சினிமா கலை எத்தனை வேகமாக வளர்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் இது.
நாடக கொட்டகை இங்கு இருந்தபோது எனது குருநாதர் அவ்வை சண்முகம் நடித்து இருக்கலாம். சிவாஜி நடித்து இருக்கலாம். இப்போது அவர்கள் குழந்தையான இந்த கமல் நடித்த ‘விஸ்வரூபம்' படம் இதே தியேட்டரில் வரப்போகிறது. சினிமாவை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம் ஆகும்.
1980-ல் டி.வி. வந்தபோது தியேட்டர்கள் அழிந்துவிடும் என்றனர். நான் வளரும் என்றேன். நான் சொன்னதுதான் இப்போது நடந்து வருகிறது. டி.வி. மூலம் வீட்டுக்குள் எத்தனை படங்கள் வந்தாலும் மக்கள் வெளியேபோய் படம் பார்ப்பதைதான் விரும்புகிறார்கள். அதற்கேற்ப நாம் சூழலை உருவாக்கித் தரவேண்டும்.
‘விஸ்வரூபம்' படத்தில் சவுண்ட் தொழில் நுட்பத்தில் புதுமை செய்யள்ளோம். படங்களில் 5.1, 7.1 அளவுதான் சவுண்ட் தொழில்நுட்பம் இருக்கிறது. விஸ்வரூபம் படத்தில் முதல் முறையாக 11.1 அளவு சவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுதத உள்ளோம். இதற்காக அமெரிக்கா செல்லவிருக்கிறேன்," என்றார்.
Post a Comment