கத்தி ரிலீசாகுமா? நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவைச் சந்திக்கும் ஏ ஆர் முருகதாஸ்!!

சென்னை: கத்தி படம் சுமூகமாக வெளிவர வேண்டும் என்று கோரி தமிழ் இயக்கத் தலைவர்கள் நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவளவன் போன்றவர்களைச் சந்தித்து சமரசம் பேசி வருகிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

விஜய் நடிக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அவர்களுக்கு துணையாக அய்ங்கரன் நிறுவனம் செயல்படுகிறது.

லைக்கா நிறுவனத்துக்கு இது முதல் தமிழ்ப் படம் கிடையாது. ஏற்கெனவே வேறு பெயரில் பிரிவோம் சந்திப்போம் என்று படமெடுத்தார்கள். கரு பழனியப்பன், சேரன் போன்றவர்கள் அதற்கு உதவியாக இருந்தார்கள்.

கத்தி ரிலீசாகுமா? நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவைச் சந்திக்கும் ஏ ஆர் முருகதாஸ்!!

இப்போது நேரடியாக லைக்கா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படமெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் இலங்கை அதிபரும் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்றழித்தவருமான மகிந்த ராஜபக்சேவுடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் விமான சேவைக்கு ராஜபக்சேதான் அனுமதி அளித்தார். ராஜபக்சேவின் மருமகன் இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்.

இப்படிப்பட்ட தொடர்புகளைக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் படத்தில், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக் கொள்ளும் விஜய் நடிப்பதாக செய்தி வெளியானதுமே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

தமிழ் உணர்வாளர்கள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி வெளியிட்டால் பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும், திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு கடிதங்களும் அளித்துள்ளன.

இப்போது கத்தி படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிறது. ஆனால் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் படத்தை வெளியிட விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளன.

இதனால் படத்தை வெளியிட சுமூகமான சூழலை உருவாக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளார் முருகதாஸ். அவரும் அய்ங்கரன் கருணாவும் சேர்ந்து தமிழ் இயக்கத் தலைவர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் பழ நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமானைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அடுத்து வைகோவைச் சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

லைக்கா நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தத் தலைவர்களிடம் விளக்கி வரும் முருகதாஸும் கருணாவும், படம் தீபாவளிக்கு சிக்கலின்றி வெளிவர உதவுமாறு கோரி வருகின்றனர்.

 

ஆகஸ்ட் 29-ல் கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

ஆர் பார்த்திபன் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகிறது.

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், வித்தகன் படத்துக்குப் பிறகு இப்போது மஇயக்கியிருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 29-ல் கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

மேலும் இதில் ஆர்யா, விஷால், பரத், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலாபால், சினேகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தில் பாடல்களும் முன்னோட்டக் காட்சிகளும் ஆரம்ப கால பார்த்திபன் படங்களில் இருந்த ஒரு அழுத்தம் மற்றும் வித்தியாசத்தைக் காட்டுவதாக இருந்தன.

படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படம் நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் நாளை சித்தார்த்தின் ‘ஜிகர்தண்டா', ‘சரபம்' மற்றும் சண்டியர் படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. எனவே இப்படத்தை ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 

சிங்கம் 3... காக்கிச் சட்டை அணியாத போலீஸ்.. ஹரியின் கதைக்கு ஓகே சொன்னார் சூர்யா!

சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தை உருவாக்குகிறார்கள் இயக்குநர் ஹரியும் நடிகர் சூர்யாவும்.

தமிழ் சினிமாவில் வணிக ரீதியான வெற்றிப் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றவர் ஹரி. இவர் இயக்கத்தில் சூர்யா நடித்த படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன.

சிங்கம் 3... காக்கிச் சட்டை அணியாத போலீஸ்.. ஹரியின் கதைக்கு ஓகே சொன்னார் சூர்யா!

இருவரும் முதலில் இணைந்த படம் ஆறு. அந்த வெற்றியைத் தொடர்ந்து வேல் படத்தில் இணைந்தனர். அந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.

அடுத்து சிங்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக சிங்கம் 2 படங்களில் இணைந்தனர். இரு படங்களுமே வசூலில் சாதனைப் படைத்தன.

சிங்கம் 2 படத்தின் க்ளைமாக்ஸில், அடுத்த பாகத்தைத் தொடர்வதற்கு வசதியாக காட்சியமைத்திருந்தனர். இப்போது சிங்கம் 3-க்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

இயக்குனர் ஹரி ‘சிங்கம் 3' படத்திற்காக நான்கு கதைகள் தயார் செய்து அதனை சூர்யாவிடம் கொடுத்துள்ளார். அவற்றில் ஒரு கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால், அடுத்து அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

இந்தக் கதையில் முழுக்க முழுக்க காக்கிச் சட்டை அணியாத ஒரு போலீசாக வருகிறாராம் சூர்யா.

தற்போது ஹரி, விஷால்-சுருதிஹாசன் நடிக்கும் பூஜை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்ட முடிவுசெய்துள்ளனர். அதேபோல சூர்யா, வெங்கட் பிரபுவின் மாஸ் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் முடிந்ததும் ஹரியும் சூர்யாவும் ‘சிங்கம் 3'-யைத் தொடங்கவிருக்கின்றனர்.

 

லிங்கா... ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்து சென்னையில்!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்காவின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு சென்னையில் முகாமிடுகிறார்கள் ரஜினி மற்றும் குழுவினர்.

கோச்சடையான் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் 'லிங்கா' படத்தில் நடித்து வருகிறார்.

லிங்கா... ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்து சென்னையில்!!

கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரபு, ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மைசூரில்

இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் 40 நாட்கள் நடத்தினர். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் சரித்திர கால செட் அமைத்து படமாக்கி வந்தனர்.

ஹைதராபாத்

இந்நிலையில் நேற்றுடன் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அங்கிருந்து புறப்படுகிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர்.

சென்னையில்

இந்த மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகத் தெரிகிறது.

ஏமாற்றம் வேண்டாம்

லிங்கா படப்பிடிப்பு ஆரம்பம் முதல் தமிழ்நாட்டில் படமாகாமல் வேறு மாநிலங்களிலேயே படமாக்கப்பட்டு வந்தது. இது இங்குள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. தற்போது அந்தக் குறையைப் போக்குவதற்காக அடுத்த கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவதென முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி.

ரசிகர்கள்

தமிழகத்தில் ரஜினியின் ஷூட்டிங் என்றால் ரசிகர்கள் படையாகத் திரண்டு வந்துவிடுவது வழக்கம். இந்த முறையும் அப்படி நடக்கும் என்பது தெரிந்திருப்பதால், ரசிகர்களுக்கென ஒரு நேரம் ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.

 

கத்தி, புலிப் பார்வை.. இலங்கை அரசுக்கு துணைபோகும் அறமற்றவர்களின் வணிகம்! - திருமுருகன் காந்தி

சென்னை: விஜய் நடிக்கும் கத்தி, பாலச்சந்திரன் கொலையை வைத்து எடுக்கப்பட்டுள்ள புலிப்பார்வை போன்ற படங்கள் இலங்கை அரசுக்கு துணை போகும் அறமற்றவர்களின் வணிக முயற்சிகள். இதன் மூலம் தமிழர்களின் போராட்ட உணர்வை சிதைக்கப் பார்க்கிறது இலங்கை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

கத்தி, புலிப் பார்வை..  இலங்கை அரசுக்கு துணைபோகும் அறமற்றவர்களின் வணிகம்! - திருமுருகன் காந்தி

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

ஈழ விடுதலை ஆதரவு அரசியல்களத்தில் தமிழகத்தின் திரைத்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பொது மக்களிடத்தில் இவர்களின் ஈழ ஆதரவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய பல நிகழ்வுகளை குறிப்பிட முடியும்.

2009க்கு பின் தமிழகத் திரைத்துறையின் ஈழ ஆதரவு அரசியலை உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழாவின் தோல்விலிருந்து இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

தமிழக திரைத்துறையில் இருக்கும் நிதி முதலீட்டு நெருக்கடியையும், வணிக நோக்கமாக இருப்பவர்களையும் இலங்கை பயன்படுத்த எண்ணியது. FICCIயின் (வர்த்தக கூட்டமைப்பு) துணை கொண்டு பல ஒப்பந்தங்களை இந்திய திரை உலகுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டது.

இதன் விரிவான திட்டமாக நாம் புரிந்து கொள்ள கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில்
1. திரைத்துறையில் முதலீடு
2. திரையுலக கலைஞர்களை தமது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்வது.

லைகா மொபைலும் ராஜபக்சேவும்

இதன் அடிப்படையிலேயே தற்பொழுது லைகா மொபைல் நிறுவனத்தின் முதலீடு திரைத்துறையில் பெரிய பேனரில், வணிக ரீதியாக லாபம் கொடுக்கும் நடிகர் விஜய் - முருகதாஸ் மூலமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. லைகா மொபைல் ராஜபக்சேவிற்கு ஆதரவாக பல வர்த்தக பணிகளை மேற்கொண்டதை நாம் அறிவோம். அந்த நிறுவனம் தமிழகத்தில் ‘இலங்கை மீது பொருளாதார தடை இருப்பதை' அறிந்து பின்வாசல் வழியாக நுழைகிறதா?

சந்தோஷ் சிவன் எனும் தரகுப் படைப்பாளி

மற்றொரு புறம் சந்தோஷ் சிவன் போன்ற அரசியல் தரகு படைப்பாளிகளின் வழியே நுணுக்க அரசியல் படங்களை ஈழவிடுதலைக்கு எதிராக கொண்டுவருவது. இந்தவகையான ‘அறமற்ற' தொழிற்நுட்ப கலைஞர்களை தமிழ்திரையுலகில் ஆளுமை செலுத்த வைப்பது. சந்தோஷ் சிவனின் ‘இனம்' திரைப்படத்தினை லிங்குசாமி கொண்டுவந்தார். சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்திற்கு சந்தோஷ் சிவன் காமிரா செய்கிறார்.

பிவிஆர் மூலம்...

மாற்று அரசியல் என்கிற பெயரில் தென்னாப்பிரிக்கவின் மூலமாக மேற்குலகினால் முன்வைக்கப்படும் 'நல்லிணக்கம்' , 'இனப்படுகொலை குற்றவாளிகளை மன்னித்து , இணைந்து வாழ்தல்' என்கிற திட்டத்தினை நுணுக்கமாக அறிவுசீவி சமூகவெளிக்குள் நகர்த்தும் 'வித் யூ, வித்தவுட் யூ' போன்ற படங்களை பி.வி.ஆர் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் ‘புரட்சி'யும் இங்கு நிகழுகிறது.

புலிப் பார்வை எனும் கருத்தியல் சிதைவு

தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய பாலச்சந்திரனின் அந்த ‘இறுதிப் பார்வை' புகைப்படம் இன்றளவும் பலரை துன்புறுத்தும் இனப்படுகொலை பதிவு. இந்த மனப்பதிவினை சிதைப்பதுவும், பாலச்சந்திரன் பற்றியான பிம்பத்தினை உடைப்பதுவும் இந்திய-இலங்கை அரசிற்கு மிக மிக அவசியமான உடனடித் தேவை. இப்பிம்பம் முற்றிலும் முறிக்கப்பட்டால் காலப்போக்கில் பல நினைவுகளை அழிக்க முடியும்.

'புலிப்பார்வை' எனும் படத்தின் அறிமுக காணொளியில் உளவியல் ரீதியாக தமிழர்களின் ஆழ்மனதில் புதைந்து நிற்கும், ‘ஏன் இந்த அப்பாவி குழந்தை படுகொலை செய்யப்பட்டான்' என்கிற கேள்வியை சிதைத்து அழிக்கும் காட்சிப்படுத்தலை காணமுடிகிறது. இதை பிரவீன் காந்தி எனும் வணிகரீதியாக மலிவான படங்களை எடுக்கும் நபரைக் கொண்டு செய்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் வழியாக தமிழர்களின் மீது உளவியல் -பொருளியல்-கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் ‘போராக' இது இலங்கை-இந்திய அரசினால் நிகழ்த்தபடுகிறது. இதிலிருந்து தமிழகமும், தமிழ் திரையுலகமும் தப்பிக்குமா எனத் தெரியவில்லை.

இனிமேல் தமிழ் திரையுலகில் ஈழவிடுதலை ஆதரவாளருக்கு கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளை விட இலங்கையின் நுண் அரசியலுக்கு துணை போகும் அறமற்றவர்களுக்கு வணிக வாய்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம்.

இம்முயற்சிகளை முறியடிப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கடமை. தமிழகமும், திரையுலகுமும் எழுந்து நிற்குமா? அல்லது 2009 போர் முடிந்ததும் எழுந்த உணர்வலைகள் இன்று அடங்கிவிடுமா?

-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

'விஐபி'யில் தனுஷ் நச், அனிருத் முறுக் இசை, வெல்டன் வேல்ராஜ்: இயக்குனர் ஷங்கர் பாராட்டு

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் வசூல் படத்தின் தயாரிப்பாளரான தனுஷின் முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது.

இந்நிலையில் கோலிவுட்டில் பல காலம் முன்னணி இயக்குனராக உள்ள ஷங்கர் வேலையில்லா பட்டதாரி படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த ஷங்கர் அது குறித்து ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ஷங்கர் கூறியிருப்பதாவது,

விஐபி பார்த்தேன். படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். தனுஷ் நச் நடிப்பு, அனிருத் முறுக் இசை வெல்டன் வேல்ராஜ். நீண்ட காலம் கழித்து ரசிகர்களை திருப்திபடுத்தும் படம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

சென்சார் ஆனது அஞ்சான்... எந்த வெட்டுமில்லாமல் யு சான்று!

சென்னை: சூர்யாவின் அடுத்த படமான அஞ்சான் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. எந்தக் காட்சிக்கும் ஆட்சேபணை சொல்லாமல் அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என யு சான்று அளித்துள்ளனர் தணிக்கை குழுவினர்.

சூர்யா, சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். சூர்யா படத்தை லிங்குசாமி இயக்குவது இதுதான் முதல்முறை.

பெரும் பொருட்செலவில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அதிக அரங்குகளில் வெளியாகிறது.

சென்சார் ஆனது அஞ்சான்... எந்த வெட்டுமில்லாமல் யு சான்று!

வழக்கமாக ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்புதான் தணிக்கை குழுவுக்கு அனுப்புவார்கள். ஆனால் சரியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதால், ரிலீசுக்கு 15 நாட்களுக்கு முன்பே படம் தயாராகிவிட்டது. தணிக்கைக்கும் அனுப்பப்பட்டது.

படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த காட்சியையும் நீக்கச் சொல்லவில்லை. அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்பதைக் குறிக்கும் யு சான்று வழங்கியுள்ளனர்.

 

மம்முட்டியின் தங்கை மகன் தமிழில் ஹீரோவாகும் 6 பிஎம் டு 6 ஏஎம்!

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் தங்கை மகன் அஸ்கர் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு 6 பிஎம் டு 6 ஏஎம் என்று தலைப்பிட்டுள்ளனர்.

மம்முட்டியின் தங்கை மகன் தமிழில் ஹீரோவாகும் 6 பிஎம் டு 6 ஏஎம்!

பி.கே. ஜேம்ஸ் அண்ட் திலகேஸ்வரி மூவிஸ் சார்பில் பி.கே. ஜேம்ஸ், ஷீலாகுரியன் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஜெய்பால் ஷண்டுகம் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். கே.ஏ.லத்தீப் இசையமைத்திருக்கிறார். எம்.டி.தமிழரசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

நாயகிகளாக சூரிய கிரண், கௌரி கிருஷ்ணா நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, சபீதா ஆனந்த், மீரா கிருஷ்ணன், விஜய்மேனன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணிவரை ஒரே இரவில் நடந்து முடியும் நிகழ்ச்சிகள்தான் படம்.

காதல், அமானுஷ்யம் கலந்து உருவாக்கப்படும் இந்தப் படத்தின் கதை இதுதான்:

இரு உயிர் தோழிகளுக்கு ஒரு காதலன் கிடைக்கின்றான். இதனால் தோழிகளுக்குள் போட்டி பொறாமை ஏற்படுகிறது.

இருவரில் ஒரு பெண் இன்னொரு பெண்ணையும் அவன் காதலனையும் கொன்று விட்டு தன்னையும் அழிக்கிறார்.

காதல் ஜோடி இன்னொரு ஊரில் மறுபிறவி எடுக்கின்றனர். அவர்களை மீண்டும் கொல்வதற்கு அப்பெண் ஆவியாக வருகிறாள். ஆவியிடம் சிக்கும் காதல் ஜோடியின் நிலைதான் க்ளைமாக்ஸ்.

 

லிப்லாக் விவகாரம்: அம்மாவை விட்டு பாட்டியுடன் நடிகை தனிக்குடித்தனம்

ஒரு படத்தில் லிப் லாக் சீனில் நடித்த மங்களகரமான நடிகை, தொடர்ந்து பல படங்களிலும் அதேபோல நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

விசாலமான நடிகருடன் நடித்த நாயகி பிக் அப் நடிகருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படத்திலும் லிப்லாக் சீனுக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

இதனால் ஏகத்துக்கு சம்பளமும் கிடைப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். வரிசையாக படங்கள் ஹிட் ஆவதால் வாய்ப்புகளும் கதவைத் தட்டுகின்றனவாம்.

ஆனால் நடிகையின் அம்மாவோ நடித்தது போதும் படிப்பைப் பாரு என்று பிரச்சினை ஏற்படுத்தவே, அதை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளாராம்.

விரைவில் வீட்டை விட்டு வெளியேறி பாட்டியுடன் சென்னையில் தனிக்குடித்தனம் வருவார் என்று கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.

 

இதய நோய் பாதித்த 100 குழந்தைகளுக்கு உதவும் சல்மான்கான்!

மும்பை: இதய நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்கு உதவப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

நடிகர் சல்மான்கான் நேற்று ரம்ஜான் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் அவர் இதய நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் ‘ட்விட்டர்' சமூக வலைதளத்தில் ஒரு தகவலை பதிவு செய்தார்.

இதய நோய் பாதித்த 100 குழந்தைகளுக்கு உதவும் சல்மான்கான்!

அதில், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வசதி இல்லாத குடும்ப பின்னணியை கொண்ட 100 குழந்தைகளுக்கு தான் உதவி செய்ய விரும்புவதாகவும், அவர்களது சிகிச்சை செலவினை தானே ஏற்பதாகவும் தெரிவித்துளார். பீயிங் ஹ்யூமன் என்ற அறக்கட்டளை மூலம் இதனை அவர் செய்யப் போகிறார்.

தனது இந்த திட்டத்தில் பயனடைய விரும்புகிறவர்கள் தன்னை சமூக வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ள சல்மான், இதைப் பயன்படுத்தி யாரும் தன்னை மோசடி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான சல்மானின் புதிய படம் கிக் குறுகிய காலத்தில் ரூ 100 கோடியைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க!!- இது ஒன்இந்தியா வாசகர்களின் ஏகோபித்த முடிவு

சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தியதும், அதில் விஜய்க்கு முதலிடம் என்று கூறி, அதற்காக தனி விழாவே நடத்தப் போவதாகவும் அறிவித்ததும், அதனால் வெடித்துள்ள சர்ச்சைகளும் நினைவிருக்கலாம்.

இதை மையப்படுத்தி நமது ஒன்இந்தியா தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தினோம்.

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க!!- இது ஒன்இந்தியா வாசகர்களின் ஏகோபித்த முடிவு

கருத்துக் கணிப்பின் தலைப்பு: 'விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், மதுரையில் விழா.. இதெல்லாம் சரிதானா?'

இந்த கருத்துக் கணிப்பு, நமது தளத்தில் தொடர்ந்து மூன்று தினங்கள் நடந்தது.

இதில் 42,114 பேர் பங்கேற்று வாக்களித்தனர். 233 கருத்துகள் பதிவாகி இருந்தன.

சமீபத்திய ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் மிக அதிகம் பேர் பங்கேற்றதும் கருத்துக்களிட்டதும் விஜய் பற்றிய இந்த கருத்துக் கணிப்புக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுப்பது, மதுரையில் விழா எடுப்பதில் தவறில்லை என்று வாக்களித்தவர்கள் 18.63 சதவீத்ததினர் மட்டுமே.

இப்படி செய்வது தப்பாச்சே என்று 21.35 சதவீதத்தினரும்,

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க, என்று 60.02 சதவீதத்தினரும் வாக்களித்திருந்தனர். அதாவது 81.37 சதவீதத்தினர் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதுமட்டுமல்ல, மிக காரசாரமான கருத்துகளை இந்த கருத்துக் கணிப்பில் காண முடிந்தது. பெருமளவு கருத்துகளில் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, "சூப்பர் ஸ்டார் என்பது பதவி நாற்காலி அல்ல. அது ஒரு நடிகருக்கு தரப்படும் சிறப்பு பட்டம். எப்படி புரட்சித் தலைவர், மக்கள் திலகம், நடிகர் திலகம் பட்டங்கள் குறிப்பிட்ட நடிகர்களுக்கு மட்டும் என வழங்கப்பட்டதோ, அப்படி ரஜினிக்கு வழங்கப்பட்டதே சூப்பர் ஸ்டார்.

அவருக்கு இது நிரந்தரமான அடைமொழி. அதைப் பறித்து தனக்கு சூட்டிக் கொள்ள நினைப்பது விஜய்க்கு அழகல்ல. அவர் தனது இளைய தளபதி பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும்," என ஒருமித்த கருத்துக்களைக் காண முடிந்தது.

"ஒரே ஒரு சூரியன் தான் பகலுக்கெல்லாம்!
ஒரே ஒரு சந்திரன் தான் இரவுக்கெல்லாம்!
ஒரே ஒரு பாஷா (சூப்பர் ஸ்டார் ) தான் உலகுக்கெல்லாம்!"

-என பாட்ஷா படப் பாடலையே இந்த விவகாரத்துக்கு முத்தாய்ப்பாகவும் சில வாசகர்கள் எழுதியுள்ளனர்.

 

கார்த்தி படத்தில் நடிக்கிறார் வடிவேலு.. ஸ்ருதியைக் காதலிப்பது போல காட்சிகள்!

சென்னை: தெனாலிராமனுக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்கக் கதை கேட்டு வரும் வடிவேலு, கார்த்தியின் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

இந்தப் படத்தில் அவர் ஸ்ருதி ஹாஸனை ஒருதலையாகக் காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறாராம்.

கார்த்தி படத்தில் நடிக்கிறார் வடிவேலு.. ஸ்ருதியைக் காதலிப்பது போல காட்சிகள்!

தெனாலிராமன் படம் பெரிதாகப் போகாவிட்டாலும், வடிவேலுவின் கவுரவத்தைக் குறைக்காத படமாக அமைந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு, இரு புதிய படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு. அதே நேரம் புதிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கவும் சம்மதித்துள்ளார்.

ரௌத்ரம், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் படம் முழுக்க வரும் நகைச்சுவை வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். வடிவேலுவும் கதையைக் கேட்ட பிறகு நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

இந்தப் படத்தில் நாயகி ஸ்ருதி ஹாஸனை ஒருதலையாகக் காதலிக்கும் வேடத்தில் வடிவேலு நடிக்கப் போகிறாராம்.

வடிவேலு இதே போல ஏற்கெனவே போக்கிரி படத்தில் நடித்தது நினைவிருக்கலாம். அதில் அஸினைக் காதலிப்பது போல நடித்திருப்பார். போதாக்குறைக்கு சூர்யா - அஸின் நடித்த கஜினி படத்தின் புகழ்பெற்ற சுட்டும் விழிச் சுடரே பாடலைப் பாடி ஆடுவது போல காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்திலும் அப்படி காட்சிகள் வைத்தால், ஏழாம் அறிவு பட டூயட்டைப் பயன்படுத்துவார்களோ?

 

நந்தா பெரியசாமி இயக்கும் ஜிகினா.. லிங்குசாமி தொடங்கி வைத்தார்

நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படமான ஜிகினாவை இன்று தொடங்கி வைத்தார் இயக்குநர் லிங்குசாமி.

கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி போன்ற படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. ஆனால் எந்தப் படமும் சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை.

நந்தா பெரியசாமி இயக்கும் ஜிகினா.. லிங்குசாமி தொடங்கி வைத்தார்

ஆனாலும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் தனது அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். படத்துக்கு சினிமாவில் ரொம்ப பழக்கப்பட்ட பெயரான ஜிகினா என்பதைத் தலைப்பாக வைத்துள்ளார்.

இந்தப் படத்தை இன்றைக்கு சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் லிங்குசாமி தொடங்கி வைத்தார்.

'ஜிகினா' படத்தை ராகுல் பிக்சர்ஸ் சார்பில் கே டி கே தயாரிக்கிறார்.

நந்தா பெரியசாமி இயக்கும் ஜிகினா.. லிங்குசாமி தொடங்கி வைத்தார்

விஜய் வசந்த் கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் சானியா. இவர்களோடு சிங்கம் புலி,'கும்கி' அஷ்வின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நந்தா பெரியசாமி இந்த படத்தின் கதை,திரைகதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார்.

பாலாஜி ரங்கா ஒளிபதிவில், ஜோன் என்ற புதிய இசை அமைப்பாளர் யுக பாரதியின் பாடல்களுக்கு இசை அமைத்து அறிமுகமாகிரார்.

 

நான் ஒன்றும் போதைக்கு அடிமை இல்லை: ஷாருக்கான் மனைவி கோபம்

மும்பை: தான் போதைக்கு அடிமையானவள் இல்லை என்று நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் படத் தயாரிப்பாளராக உள்ளார். இது தவிர அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். 3 குழந்தைகளுக்கு தாயான அவர் போதைப் பொருள்களுக்கு அடிமை என்று செய்திகள் வெளியாகின.

நான் ஒன்றும் போதைக்கு அடிமை இல்லை: ஷாருக்கான் மனைவி கோபம்

அவர் வெளிநாடு சென்றபோது விமான நிலையத்தில் சோதனை நடத்தியபோது அவரிடம் போதைப் பொருள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் ஒன்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவள் அல்ல என்று கௌரி கான் தெரிவித்துள்ளார்.

கௌரி கானின் நெருங்கிய தோழியான நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனும் போதைப் பொருளுக்கு அடிமை என்று கூறப்பட்டது. அவரது போதைப் பொருள் பழக்கமும் அவரும், ரித்திக்கும் பிரிய ஒரு காரணம் என்று பாலிவுட்டில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

குடும்பத்தினருக்கு பிரியாணி விருந்தளித்து ரம்ஜான் கொண்டாடிய யுவன் சங்கர் ராஜா

இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு முதல் முறையாக ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார் யுவன் சங்கர் ராஜா.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் இளைய மகன்.

குடும்பத்தினருக்கு பிரியாணி விருந்தளித்து ரம்ஜான் கொண்டாடிய யுவன் சங்கர் ராஜா

தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘அஞ்சான்' படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் இவரது இசையில் ‘தரமணி', ‘வை ராஜா வை', ‘வானவராயன் வல்லவராயன்' ஆகிய படங்கள் வெளிவரவிருக்கின்றன. சூர்யாவின் அடுத்த படமான மாஸ்-க்கும் யுவன்தான் இசை.

யுவன் சங்கர் ராஜா திடீரென சமீபத்தில் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதாகவும், அதில் தனக்கு நிம்மதி கிடைத்திருப்பதாகவும் அறிவித்தார். இந்த முடிவிற்கு இளையராஜா உள்ளிட்ட தன் குடும்பத்தினர் ஆதரவு தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலருக்கும் அவரது இந்த அறிவிப்பு அதிர்ச்சியளித்தது. மசூதிக்கு செல்வது, தொழுகை செய்வது என்று இஸ்லாம் மத வழக்கங்களுக்கு முழுமையாக மாறிவிட்டார் யுவன்.

இந்த ஆண்டு யுவனுக்கு முதல் ரம்ஜான் பண்டிகை ஆகும். நேற்று யுவன் சங்கர் ராஜா, காலையில் மசூதிக்கு சென்று தொழுதுவிட்டு, வீட்டுக்கு வந்ததும் தன் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி விருந்தளித்தார்.

இதில் யுவன் சங்கர் ராஜாவின் அண்ணன் கார்த்திக் ராஜா, சகோதரிகள் பவதாரிணி, வாசுகி, சகோரதரர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்பட உறவினர்கள் கலந்து கொண்டனர்.

 

ஜெயம் ரவியின் தனி ஒருவன்... முதல் முறையாக வில்லனாகிறார் அரவிந்த சாமி!

சென்னை: ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறாராம் அரவிந்த சாமி.

தளபதியில் மணிரத்னத்தால் அறிமுகமாகி, பின்னர் ரோஜா மூலம் பெரிய கதாநாயாக உயர்ந்தவர் அரவிந்தசாமி.

ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து அடியோடு ஒதுங்கினார். வியாபாரத்தில் மும்முரமாக இறங்கினார்.

ஜெயம் ரவியின் தனி ஒருவன்... முதல் முறையாக வில்லனாகிறார் அரவிந்த சாமி!

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது மறுபிரவேசமும் மணிரத்னம் மூலமே நிகழ்ந்தது. அவர் இயக்கிய கடல் படத்தில் பாதிரியார் வேடத்தில் நடித்தார் அரவிந்தசாமி.

இப்போது முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தி - தமிழில் உருவாகும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், தமிழில் ஜெயம் ராஜா இயக்க, ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் தனி ஒருவன் படத்தின் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

அவர் வில்லனாக நடிப்பது இதுவே முதல் முறை.

பட வாய்ப்புகள் அதிகம் வந்தாலும், அனைத்தையும் ஒப்புக் கொள்ள மறுக்கும் அரவிந்தசாமி, தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவற்றைப் பற்றி அவ்வப்போது ட்விட்டரிலும் எழுதி வருகிறார்.

 

எனக்கு ஒண்ணுமில்ல... நல்லாருக்கேன்! - கார்த்தி

சென்னை: எனக்கு உடல்நிலை சரியாகிவிட்டது... நன்றாக இருக்கிறேன் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

நடிகர் கார்த்திக்கு நேற்று மாலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவர் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

எனக்கு ஒண்ணுமில்ல... நல்லாருக்கேன்! - கார்த்தி

அத்துடன் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டதால் சோர்வும் ஏற்பட்டது. டாக்டர்கள் கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று காலையும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சீரானது.

இதுகுறித்து கார்த்தி தனது பேஸ்புக்கில், "எனது உடல்நிலை பூரண குணமாகிவிட்டது. தற்போது நலமுடன் இருக்கிறேன். எல்லோருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி தற்போது ‘கொம்பன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஒரு மாதமாக கமுதியில் நடந்தது.

கார்த்தியும், லட்சுமிமேனனும் அங்கு முகாமிட்டு நடித்து வந்தனர். இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பை முடித்து விட்டு கார்த்தி சென்னை திரும்பிய பிறகுதான் அவருக்கு சுகவீனம் ஏற்பட்டது.

 

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார் அபிராமி

ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகை அபிராமி.

திவ்யா கோபிகுமார் என்ற பெயரில் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்த அபிராமி, தமிழில் 2000-ல் வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார் அபிராமி

கடைசியாக கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். 2004-ல் இப்படம் வந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார் அபிராமி.

ஆறு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வாழ்க்கை மலையாளத்தில் படமாகிறது.

இதில் குட்டியம்மா வேடத்தில் போலீஸ் அதிகாரியாக அபிராமி நடிக்கிறார். இதைத் தொடர்ந்து கமல் ஹாஸன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் டப்பிங் பேசியுள்ளார். அடுத்து கமலுக்கு ஜோடியாக த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

நான் பேயை நம்புகிறேன்... - அஞ்சலி வாக்குமூலம்

நான் பேயை நம்புகிறேன். நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகும் நபர்கள் ஆவியாக உலா வருவார்கள் என்பது உண்மைதான் என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் தயாராகும் ‘கீதாஞ்சலி' படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இது ஆவிகளைப் பற்றிய கதை.

அப்படியெனில் அஞ்சலிக்கும் பேய் நம்பிக்கை உண்டா...?

இதுகுறித்து அஞ்சலி கூறுகையில், "உண்டு. எனக்குப் பேய் நம்பிக்கை ரொம்பவே உண்டு,

நான் பேயை நம்புகிறேன்... - அஞ்சலி வாக்குமூலம்

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகிறவர்கள் ஆவியாக மாறுகிறார்கள். தனது நட்சத்திரத்தில் பிறந்தவர்களைத் தேடி பிடித்து பேய்கள் பயமுறுத்தும் என்பது உண்மைதான். அதே நேரம் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை பேயால் ஒன்றுமே செய்ய முடியாது.

ஆஞ்சநேயரை கும்பிட்டால் பேய் தொல்லை இருக்காது என்பது நம்பிக்கை. சிறு வயதில் இருட்டை பார்த்து பயந்து இருக்கிறேன். ஏதோ உருவம் இருட்டில் நடந்து போவதை பார்த்து இருக்கிறேன். வளர்ந்த பிறகு அப்படியெல்லாம் பார்க்கவில்லை. ஆனால் பேய் பிடித்தவர்களை பார்த்து இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை பேய் இருக்கிறது. பேயால் பாதிப்பும் நிறைய உள்ளது," என்றார்.

அஞ்சலி இப்போது தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மதகஜராஜா படத்துக்குப் பிறகு தமிழில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அவருக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரே தொல்லை இப்போதைக்கு இயக்குநர் மு களஞ்சியம்தான். அவரது ஊர் சுற்றிப் புராணத்தில் சில காட்சிகள் மட்டும் நடித்துவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதால், அந்தப் படத்தில் அஞ்சலியை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

 

திடீர் மயக்கம்: நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் கார்த்தி திடீரென மயங்கி விழுந்ததால், நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார்.

திடீர் மயக்கம்: நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி

30 நாட்களாக படப்பிடிப்பு

கடந்த 30 நாட்களாக அவர் கமுதியில் நடந்த ‘கொம்பன்' என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார். முத்தையா டைரக்டு செய்து வரும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார். கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படமாக்கி முடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கார்த்தி சென்னை திரும்பினார்.

திடீர் மயக்கம்

இந்நிலையில் நேற்று மாலையில் நடிகர் கார்த்தி, அவரது வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

ஃபுட் பாய்சன்

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஃபுட் பாய்சன் காரணமாகவே ஒவ்வாமை ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறினர். கார்த்திக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துள்ளனர்.

இன்று வீடு திரும்பலாம்

கார்த்தி மிகவும் களைப்பாக இருந்ததால், அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தி, இன்று வீடு திரும்புவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

 

நேற்றைக்கு மழை பெய்யும்... அடுத்த படம் அறிவித்தார் பாரதிராஜா!

சென்னை: ‘அன்னக்கொடி' படத்திற்கு பிறகு தான் இயக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

இப்படத்திற்கு ‘நேற்றைக்கு மழை பெய்யும்' என்று தலைப்பு வைத்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை இயக்குனர் அகத்தியன் எழுதியுள்ளார்.

நேற்றைக்கு மழை பெய்யும்... அடுத்த படம் அறிவித்தார் பாரதிராஜா!

இப்படத்தின் கதாநாயகனாக இயக்குனர் சேரன் நடிக்கிறார். கதநாயாகியை இன்னும் பாரதிராஜா முடிவு செய்யவில்லை.

இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பாரதிராஜா தீவிரமாக உள்ளார்.

காதல்தான் படத்தின் மையக்கரு. ஆகஸ்ட் 3-ந் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடுகிறார் பாரதிராஜா.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் அன்னக்கொடி. இந்தப் படம் சரியாகப் போகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 படங்களை இயக்கப் போவதாக பாரதிராஜா அறிவித்திருந்தார். அதில் முதல் படம்தான் இந்த நேற்றைக்கு மழை பெய்யும்!

 

தமிழ்சினிமா பாக்ஸ் ஆபீஸ்... முதலிடத்தில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி!

சென்னை: தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக முதலிடத்தில் உள்ளது தனுஷின் வேலையில்லா பட்டதாரி.

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தனுஷுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிப் படமாக இது பார்க்கப்படுகிறது.

சென்னையிலும் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரியே முதலிடத்தில் உள்ளது.

தமிழ்சினிமா பாக்ஸ் ஆபீஸ்... முதலிடத்தில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி!

தமிழ் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி வெளியாகி பத்து நாட்களாகிறது. இந்த நாட்களில் மொத்தம ரூ 21 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ 3.5 கோடி வசூலாகியுள்ளது வேலையில்லா பட்டதாரிக்கு.

சதுரங்க வேட்டை

நட்டு என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்துள்ள சதுரங்க வேட்டை ஒரு ஆச்சர்ய ஹிட் படம். மனோபாலாவின் முதல் தயாரிப்பாக வந்துள்ள இந்தப் படம், வேலையில்லா பட்டதாரிக்கு இணையாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திருமணம் எனும் நிக்காஹ்

ரம்ஜான் ஸ்பெஷலாக கடந்த வியாழக்கிழமை வெளியான படம் திருமணம் எனும் நிக்காஹ். போட்டிகளே இல்லாத சூழல். படம் சிறப்பாக வந்திருந்தால் வசூலை அள்ளியிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை இழந்து, மூன்றாமிடத்தில் உள்ளது இந்தப் படம்.

அரிமா நம்பி

விக்ரம் பிரபு நடித்துள்ள அரிமா நம்பி வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. ஓரளவு நல்ல வசூலையும் பார்த்துவிட்டது.

இருக்கு ஆனா இல்ல

கேஎம் சரவணன் இயக்கத்தில் வெளியான படம் இருக்கு ஆனா இல்ல. தமிழ் சினிமாவின் சமீபத்திய ட்ரெண்டான பேய்க் காமெடி. பார்க்கக் கூடிய அளவுக்கு இருந்தாலும், ஏகப்பட்ட படங்கள் ரிலீஸானதில் இந்தப் படத்துக்கு மூச்சுத் திணறிவிட்டது.

 

அடுத்தடுத்த ரிலீஸ்... ப்ரியா ஆனந்த்... பிஸியோ பிஸி!

அரிமா நம்பியைத் தொடர்ந்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.

தமிழில் ஒரு காலத்தில் தோல்விப் பட நடிகையாகப் பார்க்கப்பட்டவர் ப்ரியா ஆனந்த். அவர் அறிமுகமான வாமனன் படம் தொடங்கி அடுத்தடுத்து படங்கள் சரியாகப் போகாத நிலையில், அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் கைகொடுத்தது.

அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்த ரிலீஸ்... ப்ரியா ஆனந்த்... பிஸியோ பிஸி!

சமீபத்தில் அவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அரிமா நம்பி வெளியானது. இந்தப் படம் வர்த்தக ரீதியாக நல்ல வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் வெளியாகின்றன. வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இரும்புக் குதிரை படம் வெளியாகிறது. இதில் பிரான்சுக்குப் போகும் பாண்டிச்சேரி பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா நாயகனாக நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் வெளியாகிறது. இதில் விமலுக்கு ஜோடியாக, மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார் ப்ரியா.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வை ராஜா வை படம் வெளியாகிறது.

 

மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டில் சிக்கிய நாயை தத்தெடுத்தார் சத்யராஜ்!

சென்னை: மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இருந்து சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட நாயை நடிகர் சத்யராஜ் தத்தெடுத்துக் கொண்டார்.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டில் சிக்கிய நாயை தத்தெடுத்தார் சத்யராஜ்!

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்கள் மீட்கும் பணி சுமார் ஒரு வாரம் நடைபெற்றது. அப்போது, இடிபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு நாய்கள் மற்றும் ஒரு காகத்தை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.

ப்ளூ கிராஸ் அமைப்பின் பராமரிப்பில் இருந்த அந்த நாய்க்குட்டிகள் ஒன்று ஏற்கனவே தத்தெடுக்கப்பட்டது. எஞ்சிய மற்றொரு நாய்க்குட்டியை நடிகர் சத்யராஜ் இன்று தத்தெடுத்துக் கொண்டார். அப்போது, அவரது மகன் சிபி ராஜ் உடன் இருந்தார்.

மீட்கப்பட்ட காகம் நல்ல ஆரோக்கியம் அடைந்ததை அடுத்து, அது மீண்டும் பறக்கவிடப்பட்டது.

 

இளையராஜா - வைரமுத்துவிடம் வரம் கேட்கிறேன்! - சீனு ராமசாமி

சென்னை: இசைஞானி இளையராஜா - வைரமுத்து ஆகிய பெருங்கலைஞர்களிடம் வரம் கேட்கும் நிலையில் நான் இருக்கிறேன், என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு வைரமுத்துவின் பாடலை இசைஞானி இளையராஜா பாடப் போகிறார் என்று வெளியான செய்திகள் வெளியாகின.

இளையராஜா - வைரமுத்துவிடம் வரம் கேட்கிறேன்! - சீனு ராமசாமி

இந்த செய்திகளைத் தொடர்ந்து இளையராஜாவை நான் சந்தித்தேன். அவரும் வைரமுத்து பாடலைப் பாட ஒப்புக் கொண்டார் என சீனு ராமசாமி ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து இசைஞானி இளையராஜா தரப்பில் கேட்டபோது, "சீனு ராமசாமி யாரென்றே இளையராஜாவுக்கு தெரியாது. அவரை இளையராஜா சந்திக்கவும் இல்லை," என்று கூறிவிட்டனர்.

அதன் பிறகு வேறொரு நாளிதழுக்குப் பேட்டியளித்த சீனு ராமசாமி, "இளையராஜாவை நான் சந்திக்கவே இல்லை. அந்த நாளிதழ் பொய்யாக செய்தி வெளியிட்டுவிட்டது," என்றார்.

இப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

கலையுலக நண்பர்களே! எனது திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட தமிழ் நெஞ்சங்களே!

அனைவர்க்கும் வணக்கம்.

எனது "இடம் பொருள் ஏவல்" திரைப் படத்தில் தத்தெடுத்த மகனைப் பற்றிய உறவை மையப்படுத்தி ஒரு தாயின் பாடல் இடம்பெறுகிறது. இதை வைரமுத்து எழுத, யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் பாடலை யாரைப் பாட வைக்கலாம் என்ற யோசனையில் என் ஆழ்மனதில் தோன்றியவர் இசைஞானி இளையராஜா அவர்கள். இதை இப்படத்தின் இசை அமைப்பாளர் யுவனிடமும், தயாரிப்பாளர் லிங்குசாமியிடமும் தெரியப்படுத்தினேன். யுவன் தன் அப்பாவிடம் நான் கேட்கிறேன் என்றார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மாதிரியான ஒரு பாடலை இசைஞானி பாடினால் எப்படி இருக்கும்!

ஆனால் சில நண்பர்கள் இதனை வேறுமாதிரித் திரித்து எழுதி வருகின்றனர். இதைப் பகை முற்றுப்பெற்ற காலமாக நான் பார்க்கிறேன். இரண்டு பெருங் கலைஞர்களின் பெருந்தன்மை சம்மந்தப்பட்ட விஷயம் இது. நான் இருவரிடமும் வரம் கேட்கும் நிலையிலேயே இருக்கிறேன்.

"பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்!" - என்ற பாரதியின் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன. இணைத்து வைக்கும் கரங்களே, என்னை ஆசீர்வதியுங்கள்!

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சீனு ராமசாமி மனதுக்குள் நினைத்த விஷயம் அந்த ஆங்கில நாளிதழுக்குத் தெரிந்து, அவர்கள் சீனு ராமசாமி பேட்டியை கற்பனையாக வெளியிட்டதுதான்.

அடேங்கப்பா.. மகா மார்க்கெட்டிங் ப்ளான்தான் போங்க!!

 

தீபாவளிக்கு தள்ளிப் போனது ஷங்கரின் ஐ!

மெகா இயக்குநர் ஷங்கரின் தீபாவளிக்கு தள்ளிப் போனது ஷங்கரின் ஐ!  

உண்மையில் படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகிவிடும் என்று கூறி வந்தனர். ஆனால் அப்போது படப்பிடிப்பே முடியாமல் நீண்டு கொண்டிருந்தது.

அடுத்த மாதம், அடுத்த மாதம் என தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இந்தப் படம் தொடர்பான நிதிப் பிரச்சினைகளை ஓரளவுக்கு சமாளித்துவிட்டதால், ரிலீஸ் தேதியை விரைவிலேயே அறிவிக்கவிருக்கிறார்களாம்.

தீபாவளிக்கு ஏற்கெனவே விஷால், விஜய் படங்கள் மோதுகின்றன. அதற்கு முன் கமலின் உத்தம வில்லன் வருகிறது.

இப்போது ஐயும் தீபாவளி ரிலீஸ் என்றால் தியேட்டர்கள் கிடைப்பது பெரும் திண்டாடட்டமாகிவிடுமே என யோசிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

 

'சாதிப் பெயர் மேனன் வேண்டாம்... பார்வதி என்றே அழையுங்கள்!'

திரையுலகினர் பலர் தங்கள் பெயர்களுக்கு முன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வது இப்போது சாதாரணமாகிவிட்டது.

அதுவும் சாதாரண சாதிக்காரர்கள் யாரும் அப்படி போட்டுக் கொள்வதில்லை. சிலர் நரேஷ் அய்யர், மகாலட்சுமி அய்யர், ஜனனி அய்யர், பல்ராம் அய்யர் என வெளிப்படையாகப் போட்டுக் கொள்கின்றனர். அதை பெருமையாக மேடைகளில் சொல்லிக் கொள்ளத் தவறுவதில்லை.

ஒரு முறை ஜனனி அய்யர் என்ற நடிகையிடம், ஏன் இந்த அய்யர் என்ற சாதி அடையாளத்தை விடாமல் தொடர்கிறீர்கள் என்ற கேட்டதற்கு, அது என் பெருமை. நீக்க முடியாது என்றார் திமிருடன்.

'சாதிப் பெயர் மேனன் வேண்டாம்... பார்வதி என்றே அழையுங்கள்!'

இப்படிப்பட்ட சினிமாக்காரர்களுக்கு மத்தியில் ஒரு நடிகை தன் பெயருடன் சாதியை சேர்த்து அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர்தான் பார்வதி.

தமிழில் ‘பூ' படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2006-ல் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து 4 படங்கள் மலையாளத்தில் நடித்தாலும் தமிழில் வெளியான ‘பூ' படம் இவருக்கு நடிகைக்கான அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படத்திற்காக இவர் பல விருதுகள் பெற்றுள்ளார்.

பின்னர் ‘சென்னையில் ஒரு நாள்', தனுஷுடன் இணைந்து ‘மரியான்' படங்களில் நடித்தார். தற்போது கமல் ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்' படத்தில் நடித்து வருகிறார்.

தன் பெயரை பார்வதி மேனன் என்று அழைப்பதைத் அடியோடு தவிர்க்குமாறு அவர் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "என் பெயரை பார்வதி மேனன் என்று அழைக்கிறார்கள். அப்படி என்னை அழைக்காதீர்கள். என் பெயர் பார்வதி என்பது மட்டுமே. பாஸ்போர்ட்டில் கூட பார்வதி என்றுதான் இருக்கிறது. அப்படி என்னைக் கூப்பிட்டால் மட்டும் போதும்.

ஒரு கன்னட படத்தில் என் பெயரை பார்வதி மேனன் என்று போட்டார்கள். அதிலிருந்து அனைவரும் என்னை அப்படியே கூப்பிடுகிறார்கள். ஆதலால் என் பெயரில் உள்ள மேனனை தூக்கிவிட்டு பார்வதி என்றே அழையுங்கள். நானாக இருந்தால் போதும்.. சாதி அடையாளம் வேண்டாம்," என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!

ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாவதாக இருந்த ஆர் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் தள்ளிப் போய்விட்டது. அந்தத் தேதியில் சில பெரிய படங்கள் வரவிருப்பதால் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப் போகிறார்களாம்.

வித்தகன் படத்துக்குப் பிறகு பார்த்திபன் இயக்கியுள்ள படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்குநர் பொறுப்போடு நிறுத்திக் கொண்டார்.

ஆனால் ஆர்யா, அமலா பால், சினேகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்தப் படத்தில்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!

இந்தப் படத்தை பார்த்திபன் மிக முக்கியப் படைப்பாகக் கருதுவதால், அனைத்து ரசிகர்களும் பார்க்கும் வகையில் படத்தை வெளியிட வேண்டும் என முயற்சித்து வருகிறார்.

படத்தை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்றைய தேதியில் ஜிகிர்தண்டா, சரபம், சண்டியர் போன்ற படங்கள் வெளியாகின்றன.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!  

இத்தனை படங்களுக்கு மத்தியில் தன் படத்தை வெளியிட்டால், திரையரங்குகள் கிடைப்பது கடினம், சரியாக மக்களைப் போய்ச் சேர்வதும் சந்தேகம் என்பதை உணர்ந்ததால், கதை திரைக்கதை வசனம் இயக்கத்தை வேறு தேதிக்கு மாற்ற பார்த்திபன் முடிவு செய்துள்ளார்.

புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப் போகிறாராம் பார்த்திபன்.

 

திருமணம் எனும் நிக்காஹ்- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5

நடிப்பு: ஜெய், நஸ்ரியா, பாண்டியராஜன், மயில்சாமி
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ் வி ரவிச்சந்திரன்
இயக்கம்: அனீஸ்

திருமணம் எனும் நிக்காஹ்... என்ன நினைத்து இந்தத் திரைக்கதையை உருவாக்கினாரோ இயக்குநர் அனீஸ்... எல்லாமே அரைவேக்காட்டு பிரியாணி மாதிரியாகி பார்வையாளர்களைப் படுத்தி எடுத்துவிட்டது.

ஜெய்யும் நஸ்ரியாவும் பக்கா பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு நாள் இருவருமே முஸ்லிம் பெயர் கொண்ட பயணச்சீட்டுகளில் பயணிக்கிறார்கள். ஒருவரையொருவர் முஸ்லீம் என நம்பி, அந்த சுவாரஸ்யம் தந்த ஈர்ப்பில் காதலில் விழுகிறார்கள்.

திருமணம் எனும் நிக்காஹ்- விமர்சனம்

பரஸ்பரம் இஸ்லாத்தைப் படிக்க, அங்கு நிலவும் பழக்க வழக்கங்களைக் கற்க முயல்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருமே முஸ்லீம் இல்லை என்பது அம்பலமாகிறது. அத்துடன் அந்த காதலில் இருந்த ஈர்ப்பு போய்விடுகிறது. இருவருக்கும் நிச்சயமான திருமணம் நின்று போகிறது.

இறுதியில் இருவரும் இணைகிறார்களா என்பது க்ளைமாக்ஸ்.

ஏதோ சின்னபுள்ள விளையாட்டு மாதிரி ஒரு திரைக்கதை. அழுத்தமான காரணங்கள் இல்லாமல் இலக்கின்றிப் போகின்றன காட்சிகள். இடைவேளைக்குப் பிறகு என்ன செய்வது என்றே தெரியாமல், இயக்குநர் குழம்பிப் போனது தெரிகிறது.

திருமணம் எனும் நிக்காஹ்- விமர்சனம்

ஜெய் - நஸ்ரியா இருவருக்கும் பிராமண வேஷம். சுத்தமாகப் பொருந்தவே இல்லை. அதைவிட இருவரும் முஸ்லிம்களாக வரும்போது நம்பும்படி இருக்கிறது.

நீங்க சொன்ன மாதிரி பத்து நிமிடத்தில் வருகிறேன், என அண்ணா சாலை காபி ஷாப்பில் நஸ்ரியாவைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, கேளம்பாக்கத்திலிருந்து புறப்படும் காட்சியில் மட்டும் ஜெய்யிடம் தனித்துவ நடிப்பு தெரிகிறது.

அழகு, குறும்பு கொப்பளிக்கும் அந்த முகம், இஸ்லாமிய தோழியிடம் அவர்கள் வழக்கங்களை அறிந்து கொள்ளும் துடிப்பு.. என வரும் காட்சிகளிலெல்லாம் அள்ளுகிறார் நஸ்ரியா.

ஜெய்க்காக பிரியாணியை வாங்கிக் கொண்டு கடற்கரைக்கு வரும் நஸ்ரியாவிடம், ஜெய் சிக்கிக் கொண்டு தவிப்பதும், கடைசியில் அதை அல்லாவின் பெயரில் சமாளிப்பதும் சுவாரஸ்யமான காட்சி.

ஜெய்யிடம் வில்லன் பகைமை கொள்வதற்கான காரணம் மகா சொதப்பல். அது மட்டுமல்ல, ஜெய் முதல் முதலாக வீட்டுக்குள் வரும்போதே, அவருடன் பார்வையாலேயே மல்லுக்கட்டுவது ஏன் என்று புரியவில்லை. அப்புறம் அந்த முஸ்லிம் பெரியவர்... அத்தனை பெருந்தன்மையான மனிதர், உண்மை தெரியும் போது வில்லத்தனம் காட்டுவாதக் காட்சி வைத்திருப்பது பொருத்தமாகவே இல்லை.

கடைசியில் வழக்கம்போல ஜெய்யை ஆக்ஷன் ஹீரோவாக்கியிருப்பது சரியான காமெடி.

திருமணம் எனும் நிக்காஹ்- விமர்சனம்

அவசரத்துக்கு ரயில் டிக்கெட்டை மாற்றித் தரும் கேரக்டரில் மயில்சாமி (இப்படியெல்லாம் கூட ஒரு சேவை இருக்கிறதா..?!), கட்டப்புலி பாண்டியராஜன் ஆகியோர் கொஞ்ச நேரம் வந்து கிச்சுகிச்சு மூட்டப் பார்க்கிறார்கள்.

படத்தின் இசை மகா சொதப்பல். ஆணா பெண்ணா என்றே யூகிக்க முடியாத, பொருத்தமில்லாத குரல்களில் கர்ண கடூரமாக ஒலிக்கின்றன பாடல்கள். ஒளிப்பதிவு பரவாயில்லை.

இயக்குநர் அனீஸுக்கு, எண்பது - தொன்னூறுகளில் வந்த சில இந்திப் படங்கள் மாதிரி எடுக்க ஆசை போலிருக்கிறது. ஆசை தப்பில்லை. அதற்கான திரைக்கதையை உருவாக்கும்போது, காட்சிகள் அமைக்கும்போது இன்னும் கவனமாக இருந்திருக்கலாம்!

 

நெஸ் வாடியாவை, பிரீத்தி கடுமையாகத் திட்டினார்– தொழிலதிபர் வாக்குமூலம்

மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா, அணியின் உரிமையாளரான நெஸ் வாடியாவை கடுமையாக திட்டினார் என்று பிரீத்தி ஜிந்தா மானபங்க வழக்கில் தொழிலதிபர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தி நடிகையான பிரீத்தி ஜிந்தா, அவருடைய முன்னாள் காதலர் மற்றும் பிரபல தொழிலதிபரான நெஸ் வாடியா மீது கடந்த ஜூன் மாதத்தில் மானபங்க புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அப்புகாரில், மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின்போது தன்னை நெஸ் வாடியா பலபேர் முன்னிலையில் மானபங்கம் செய்து, மிரட்டியதாக பிரீத்தி தெரிவித்திருந்தார்.

நெஸ் வாடியாவை, பிரீத்தி கடுமையாகத் திட்டினார்– தொழிலதிபர் வாக்குமூலம்

இது தொடர்பாக மும்பை மெரின் டிரைவ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் நெஸ் வாடியா மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு இரு தரப்பு சாட்சிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நெஸ் வாடியா தரப்பு சாட்சியான தொழில் அதிபர் சவன் தரு என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று பிரீத்தி மற்றும் நெஸ் வாடியா பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் நெஸ் வாடியா புறப்பட்ட போது, நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியாவைப் பார்த்து சத்தம் போட்டு கத்தினார். கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

சீனுராமசாமியா.. அது யாருன்னே தெரியாது!- கடும் கோபத்தில் இளையராஜா

சீனு ராமசாமி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் என்னைச் சந்தித்ததாகவும், அவர் குறிப்பிடும் ஒருவர் எழுதிய பாடலை நான் பாடப் போவதாகவும் கூறுவது வேடிக்கையானது, என்று கேள்வி எழுப்பியுள்ளார் இசைஞானி இளையராஜா.

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை போன்ற படங்களைத் தொடர்ந்து, இப்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி. இவரது படத்துக்கு முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சீனுராமசாமியா.. அது யாருன்னே தெரியாது!- கடும் கோபத்தில் இளையராஜா

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். வைரமுத்துவுடன் யுவன் சங்கர் ராஜா இணைவது இதுவே முதல் முறை. இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு, இஷ்டத்துக்கும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இளையராஜா பெயரையும் தேவையில்லாமல் இழுத்து, விளம்பரம் தேடப் பார்க்கிறார் சீனு ராமசாமி என்ற குற்றச்சாட்டு பகிரங்கமாகவே எழுந்துள்ளது.

ஏற்கெனவே இந்தப் படத்தின் கதாநாயகி மனீஷா விஷயத்தில் சர்ச்சையில் சிக்கினார் சீனு ராமசாமி.

இப்போது இடம் பொருள் ஏவல் படத்தின் ஒரு பாடலை இளையராஜா பாடப் போகிறார் என கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதனை இளையராஜா தரப்பு மறுத்துவிட்டது. இதுகுறித்து நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

ஆனால் பிரபல நாளிதழ் ஒன்றில் இன்று பேட்டியளித்துள்ள சீனு ராமசாமி, தான் இளையராஜாவைச் சந்தித்துப் பேசியதாகவும், அப்போது, வைரமுத்து எழுதிய ஒரு அம்மா பாடலைப் பாட இளையராஜா சம்மதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா ஏற்பாடு செய்ததாகவும், விரைவில் இந்தப் பாடல் பதிவு நடக்கவிருக்கிறது என்றும் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

சீனு ராமசாமியா? அது யாரு?

சீனு ராமசாமியின் இந்தப் பேட்டிக்கு இளையராஜா கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சீனு ராமசாமியை யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படி ஒருவர் என்னைச் சந்திக்கவும் இல்லை..," என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இளையராஜா தரப்பில் மேலும் விசாரித்த போது, "எப்படியாவது இளையராஜாவுடன் மீண்டும் கைகோர்த்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் வைரமுத்து. அதற்கு இயக்குநர் பாலாவைப் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால் ராஜா சார் தன் முடிவிலிருந்து மாறவில்லை. துரோகங்களை அவ்வளவு சுலபத்தில் அவரால் மறக்க முடியாது. இப்போது, ராஜா சாரின் மகனை வைத்து எப்படியாவது மீண்டும் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் பக்கம் வர முயற்சிக்கிறார் வைரமுத்து. அதை ராஜா சார் ஒருபோதும் விரும்பவில்லை. இனி அதற்கான வாய்ப்பும் இல்லை.

இசைஞானியைச் சந்திக்காமலே, அவரைச் சந்தித்ததாகவும் வைரமுத்துவின் பாடலைப் பாட ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும் சீனு ராமசாமி கூறிக் கொண்டு திரிவதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது? இது வைரமுத்துவின் வேலை என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்? இத்தனை காலம் ராஜா சாருக்கு எதிராக தான் கூட்டணி போட்டு செய்த குழிப் பறிப்பு வேலைகளை அத்தனை சுலபத்தில் மறந்துவிடச் சொல்கிறாரா வைரமுத்து?," என்றனர் கொந்தளிப்புடன்.

இதுகுறித்து சீனுராமசாமியின் விளக்கத்தைக் கேட்க முயன்றோம். ஆனால் அவர் நமது தொடர்பு எல்லைக்கு இன்னும் வரவில்லை!

 

இப்படி குப் குப்னு புகை விடுறது சரியா தனுஷ்?- புகையிலை எதிர்ப்பு அமைப்பு கண்டனம்

சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பது போன்ற சுவரொட்டிகள், தட்டிகள் வைக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வேல்ராஜ் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படம் கடந்த வாரம் வெளியானது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், மது அருந்தும் காட்சிகளும் அதிகமாக இடம் பெற்றுள்ளன.

இப்படி குப் குப்னு புகை விடுறது சரியா தனுஷ்?- புகையிலை எதிர்ப்பு அமைப்பு கண்டனம்

இதனை தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. மாநில சுகாதார துறையிடமும் மத்திய தணிக்கை குழுவிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளது.

புகையிலை எதிர்ப்பு இயக்கத்தின் அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் இதுபற்றிக் கூறுகையில், "வேலையில்லா பட்டதாரி படத்துக்கு தணிக்கை குழு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளது.

இதில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. படத்தை விளம்பரபடுத்துவதற்காக தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை சுவரொட்டிகளாக அச்சிட்டுள்ளனர். இது புகையிலை தடுப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.

தனுஷ் பிரபலமான நடிகர். சுகாதார கொள்கைகளை உள்ளடக்கிய புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை அவர் மீறி இருக்கிறார். தனுஷ் புகை பிடிப்பது போல் ஒட்டப்பட்டுள்ள அனைத்து போஸ்டர்களையும் அகற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும்," என்றார்.

 

பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ்ஸிலும் கால் பதித்தார் நடிகர் விஜய்!

சென்னை: பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ்ஸிலும் கால் பதித்தார் விஜய்.

சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்றவற்றை முன்பெல்லாம் திரையுலகினர் திரும்பிக் கூடப் பார்க்காமல் இருந்தனர்.

ஒரு கட்டத்தில், இந்த சமூக வலைத்தளங்கள்தான் எதிர்கால மீடியா என்பது உறுதியானது. இந்த உண்மை புரிய ஆரம்பித்ததும் மெல்ல மெல்ல சினிமா பிரபலங்கள் ட்விட்டர், பேஸ்புக்கில் நுழைய ஆரம்பித்தனர்.

பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ்ஸிலும் கால் பதித்தார் நடிகர் விஜய்!

குறிப்பாக ட்விட்டரில் இல்லாத திரைப் பிரபலங்களே இல்லை என்றாகிவிட்டது. எந்த சமூக வலைத் தளங்களிலும் இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினியே ட்விட்டருக்கு வந்துவிட்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், தான் எந்த தளத்தில் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக இதுவரை காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.

ஆனால் ட்விட்டரில் முதலில் கால் பதித்தார். பின்னர் பேஸ்புக்குக்கும் வந்துவிட்டார். இரண்டிலுமே அவரைப் பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்த நிலையில் அவர் கூகுள் ப்ளஸ் தளத்திலும் அடி வைத்துள்ளார். அவரது சில புகைப்படங்கள் அந்தப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

விஜய்யின் சமூக வலைத் தளப் பக்கங்கள்:

பேஸ்புக்: https://www.facebook.com/ActorVijay

ட்விட்டர்: https://twitter.com/Vijay_cjv

கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/111719954424922134590/posts

 

தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகும் சதுரங்க வேட்டை!

சென்னை: நட்டி என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் சதுரங்க வேட்டை படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படத்தை இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகும் சதுரங்க வேட்டை!

படத்துக்கு தமிழில் அபார வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்களிலேயே பெரிய வெற்றி சதுரங்க வேட்டைக்கு கிடைத்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்தியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறதாம்.

அக்ஷய் குமார் அல்லது அஜய் தேவ்கன் ஆகிய இருவரில் ஒருவர் ஹீரோவாக நடிப்பார் என்கிறார்கள்.

தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 

மீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக மலையாளத்தில் செகண்ட் இன்னிங்ஸ்!

சென்னை: ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர் அபிராமி. ஹோம்லியான் முகத்துடன் வலம் வந்தவர்.

கமலுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த விருமாண்டி படம் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்பாக நடிப்புக்கு முழுக்கு போட்டார் அபிராமி.

மீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக மலையாளத்தில் செகண்ட் இன்னிங்ஸ்!

அமெரிக்காவில் வாழ்க்கை நடத்திய அபிராமி, நடிக்கும் ஆசையில் திரும்பி வந்த போது கிடைத்தென்னவோ ஒரே ஒரு டி.வி நிகழ்ச்சி மட்டும்தான்.

இதனால் ஏமாற்றத்துடன் அமெரிக்கா திரும்பிச் சென்ற அபிராமியை மீண்டும் அழைத்து வந்துள்ளது கேரளா. அது அவருடைய பிறந்த மண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி குட்டியம்மா. இவருடைய வாழ்க்கை வரலாறு "டிரைவர் ஆன் டியூட்டி" என்ற பெயரில் படமாகின்றது.

மனோஜ் பெல்லவா இயக்கும் இத்திரைப்படத்தில் குட்டியம்மா வேடத்தில் அபிராமி நடிக்க இருக்கின்றார்.

சதாரண சப்-இன்ஸ்பெக்டராக போலீஸ் துறைக்குள் நுழைந்து ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறையில் துணிச்சலுடன் போராடி குட்டியம்மா எப்படி ஜெயித்தார் என்கிற கதை.

இதற்காக அபிராமி இப்போது குட்டியம்மாவின் வாழ்க்கையை படித்து வருகிறார். அவரது மேனரிசம், நடை உடை பாவனைகளை கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிகினி உடை பொருந்தாததால் யாமி கவுதமுக்கு பறிபோன பட வாய்ப்பு

மும்பை: பிகினி உடை அணிந்து நடிக்க ஒத்துக் கொண்டாலும், அது பொருந்தாததால் படத்திலிருந்து விலக்கப்பட்டு சோகத்தில் ஆழ்ந்துள்ளார் நடிகை யாமி கவுதம்.

ராதாமோகனின் "கெளரவம்" படம் மூலம் தமிழில் கதாநாயகியானவர் யாமி கெளதம். தமிழ், தெலுங்கு, இந்திப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்து வரும் யாமி தமிழில் நீண்ட நாட்களாக "தமிழ்ச்செல்வனும், தனியார் அஞ்சலும்" என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

பிகினி உடை பொருந்தாததால் யாமி கவுதமுக்கு பறிபோன பட வாய்ப்பு

இந்நிலையில் ஒரு இந்தி பட வாய்ப்பை பெற்ற யாமி அந்தப் பட வாய்ப்பிற்காக ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு அழைக்கப்பட்டார். அப்படத்தில் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.

அவரும் ஒப்புக் கொண்டு நீச்சல் உடையை கொடுத்தனர். ஆனால் அந்த உடை அவருக்கு பொருத்தமாக இல்லை என்று சொல்லி அந்தப் படத்தில் அவரை நடிக்க வைக்க மறுத்துவிட்டனர்.

பிகினி உடை அணிந்து நடிக்க சம்மதித்தும் யாமியை அப்படக்குழுவினர் நிராகரித்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

தன்னுடைய முதல் படமான "விக்கி டோனர்" மூலம் சிறந்த நடிகை என்று புகழ் பெற்றவர் யாமி. இந்நிலையில் யாமி நிராகரிக்கப்பட்ட அப்படத்தில் லிசா ஹைடன் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இடம் பொருள் ஏவலில் வைரமுத்துவின் பாடலைப் பாடுகிறேனா?- இளையராஜா கடும் மறுப்பு!

சென்னை: இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை தான் பாடப் போவதாக வந்த செய்திகளை கடுமையாக மறுத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

சீனு ராமசாமி இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் உருவாகும் படம் இடம் பொருள் ஏவல். இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஒரு பாடலை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார்.

இடம் பொருள் ஏவலில் வைரமுத்துவின் பாடலைப் பாடுகிறேனா?- இளையராஜா கடும் மறுப்பு!

வைரமுத்து பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது இதுவே முதல் முறை.

இந்த நிலையில் இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளையராஜா ஒரு பாடலைப் பாடப் போவதாக செய்தி வெளியானது. உடனே அது வைரமுத்து எழுதிய பாடல்தான் என்ற முடிவுக்கு வந்த மீடியா, பெரிய இடைவெளிக்குப் பிறகு வைரமுத்துவின் பாடலை இளையராஜா தன் குரலில் பாடப் போவதாக செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.

பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலும் ஆர்வத்தில் ரசிகர்கள் இந்த செய்தியைப் பரப்ப ஆரம்பித்தனர்.

ஆனால் இதனை இசைஞானி இளையராஜா கடுமையாக மறுத்துள்ளார்.

இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் என்ற அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கத்தில் இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் இசையில் இடம் பொருள் ஏவல் படத்தில் இளையராஜா ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பவர் நடிகர் தனுஷ். வேறு யார் எழுதிய வரிகளையும் அவர் பாடவில்லை. ரசிகர்கள் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.