4/30/2011 10:13:16 AM
'எனது தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்' என்று அஜீத்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். மே 1-ம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாள். பிறந்தநாள் அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அவர் மேலும் கூறியுள்ளதாவது: 'அமராவதி' படம் மூலம் தொடங்கிய என் திரையுலகப் பயணத்தில், 'மங்காத்தா' 50-வது படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப்பயணத்தில், எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என்று கருதி, இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்துக்காகப் பயன்படுத்தியது இல்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும், சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தைக் கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை, பார்க்கவும் மாட்டேன். கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை. சமுதாயநலப் பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக, தங்களது குடும்பத்துக்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல்ல உள்ளமும், எண்ணமும் போதும் என்பதே என் கருத்து. மே 1-ம் தேதி எனது 40-வது பிறந்தநாளில், இந்த கருத்தையே எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்றுமுதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த 'அஜித்குமார் நற்பணி இயக்கத்தை' கலைக்கிறேன். மாறிவரும் காலகட்டத்தில், மக்கள் எல்லோரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் கவுரவம் கிடைக்கும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது பிறந்தநாள் பரிசாகும். இவ்வாறு அஜித்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். அஜீத்தின் இந்த முடிவு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன் : அஜீத்
Post a Comment