ரஜினி-கமல் பங்கேற்கும் இயக்குநர்களின் ‘டி-40′!

|

Director's Association
தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம் தனது 40வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. டி 40 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த அனைவருமே பங்கேற்கிறார்கள்.
இந்த விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. இயக்குநர்கள் பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, பார்த்திபன், விக்ரமன், சசிக்குமார், சமுத்திரக்கனி உட்பட 200 இயக்குநர்கள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் இந்திய அளவில் சிறந்த இயக்குநர்களை வரவழைத்து கெளரவிக்கவும் உள்ளனர். இந்த கூட்ட ஆலோசனை குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “காலங்களைக் கடந்தது கலைத் துறை. அந்தக் கலைத்துறையின் தலைக் குழந்தை இயக்குநர்கள் சங்கம்.
தென்னிந்தியாவில் இயக்குநர்களுக்காக உதித்த முதல் சங்கம் இது. 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சங்கத்தில் தமிழ் மொழி மட்டும் இன்றி, இன்று பல இந்திய மொழிகளை இயக்கும் புகழ் பெற்ற இயக்குநர்கள் இன்று இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதை கெளரவமாகவும், அடையாளக் குறியீடாகவும் கருதுகிறார்கள்.
இந்த சங்கத்தின் 40வது ஆண்டு விழாவை பிரமாண்டமாக அக்டோபர் 23ம் தேதி சனிக்கிழமை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சிறப்பாக கொண்டாட இருக்கிறது.
காலை 10 மணி முதல் 2 மணி வரை இசைவிழா நடைபெறும். 2 மணி முதல் 4 மணி வரை கருத்தரங்கம் நடைபெறும். 5 மணி முதல் 10 மணி வரை கலை,இலக்கிய விழா நடைபெறும்.
அந்த விழாவில் சாதனை படைத்த, சாதனை படைத்துக் கொண்டிருக்கிற இந்தியாவின் அனைத்து மொழி இயக்குநர்களும் கலந்து கொண்டு இயக்குநர்கள் சங்கத்தை வாழ்த்துகிறார்கள்.
தெலுங்கு, கேரளா, கர்நாடகா மற்றும் அகில இந்திய அளவில் இருந்து வாழ்த்த வருகின்ற இயக்குநர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள். மேலும் இச்சங்கத்தின் மூத்த உறுப்பினர்களாக உள்ள வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற சாதனை படைத்த அனைத்து இயக்குநர்களையும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சிறப்பு செய்ய இருக்கிறது. அவர்களது உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட உள்ளது.
இந்த விழாவில் இந்திய அளவிலிருந்து நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், இசைக் கலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ரஜினி, கமல் உட்பட அனைத்து நடிகர்களூம்,நடிகைகளும் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இந்த விழாவை முன்னிட்டு 23ம் தேதி அன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த விழாவின் நோக்கமே, விழாவின் மூலம் வரும் நிதியைக்கொண்டு இயக்குநர்கள் சங்கத்திற்கென்று தனி கட்டடம் கட்டவேண்டும் என்பதுதான்”, என்றார்.
 

Post a Comment